Published : 30 Sep 2021 06:43 PM
Last Updated : 30 Sep 2021 06:43 PM

எங்கள் பேனாக்களை உடைக்காதீர்கள்: பள்ளி முன் திரண்ட ஆப்கன் பெண்கள்; துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கு தலிபான்கள் தடை போட்டுவரும் நிலையில், இன்று காபூலில் ஒரு பள்ளியின் முன் சில பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.

ஆப்கன் தலைநகர் காபூலின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் வாயிலில் இன்று 6 பெண்கள் திரண்டனர். அவர்கள் கையில் ஒரு பதாகை வைத்திருந்தனர்.

அதில், எங்களின் பேனாக்களை உடைக்காதீர்கள், எங்களின் புத்தகத்தை எரிக்காதீர்கள், எங்கள் பள்ளிகளை மூடாதீர்கள் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

தலிபான்கள் முன்னால் துணிச்சலாக இந்தப் பதாகையை அவர்கள் உயர்த்திப் பிடித்தனர். தலிபான்கள் முதலில் அந்தப் பெண்களை கீழே தள்ளிவிட்டு போராட்டத்தை முடக்கப் பார்த்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை படம்பிடித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் துப்பாக்கியால் தாக்கப்பட்டார். அப்போதும் சிறிதும் அஞ்சவில்லை. அங்கிருந்து அவர்கள் கலைந்தும் செல்லவில்லை. உடனே ஒரு தலிபான் வானத்தை நோக்கிச் சுட்ட்டார். அப்போது அந்தப் பெண்கள், பள்ளிகளுக்குள் சென்று தஞ்சம் புகுந்தனர்.

பெண்கள் போராட்டம் தடுக்கப்பட்டது குறித்து தலிபான் காவலர் மாவ்லவி நஸ்ரத்துல்லா கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் மக்கள் போராட்டத்துக்கு அனுமதியுண்டு. வேறு எந்த நாட்டிலும் நடத்தப்படுவதுபோல் இங்கும் போராட்டங்களை நடத்தலாம். ஆனால், பாதுகாப்பு அமைப்பிடமிருந்து முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும். இன்று போராட்டம் நடத்திய பெண்கள் உரிமை அமைப்பினர் "Spontaneous Movement of Afghan Women Activists" எவ்வித அனுமதியும் பெறவில்லை. அதனாலேயே கூட்டத்தைக் கலைத்தோம்" என்றார்.

ஆப்கானிஸ்தானில் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பெண் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல தடை விதித்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன.
அதேபோல் காபூல் பல்கலைக்கழகத்துக்கும் பெண்கள் கல்வி கற்கவோ, கற்பிக்கவோ வர வேண்டாம் என்று தலிபான்கள் தெரிவித்துவிட்டனர்.

இதனால், பெண் கல்வி ஆப்கனில் கேள்விக்குறியாகியுள்ளது. 1990களில் தலிபான் வசம் ஆப்கானிஸ்தான் இருந்தபோது பெண்கள் ஆண் துணையின்றி வெளியில் வரக்கூடாது. அவர்கள் அவ்வாறு வந்தால் கசையடி வழங்கப்படும். ஏன் சில பெண்கள் சுட்டும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இது மாதிரியான கெடுபிடிகள் இனியும் தொடருமோ என ஆப்கன் பெண்கள் அஞ்சினாலும் இப்போதெல்லாம் போராட அவர்கள் தயங்குவதில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x