Last Updated : 29 Sep, 2021 09:17 PM

 

Published : 29 Sep 2021 09:17 PM
Last Updated : 29 Sep 2021 09:17 PM

ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை இயக்குங்கள்: இந்தியாவுக்கு தலிபான்கள் கடிதம்

ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை இயக்குங்கள் என இந்திய அரசுக்கு தலிபான்கள் கடிதம் எழுதியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சி நடைபெறுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் காபூலைக் கைப்பறியதுமே பல்வேறு நாடுகளும் அவசர கதியில் தத்தம் மக்களை இயன்றவரை ஆப்கனில் இருந்து மீட்டன. அந்த வகையில் இந்திய விமானப்படையின் விமானம் கடைசியாக ஆகஸ்ட் 15ல் ஆப்கன் சென்று இந்தியர்களை மீட்டு வந்தது.
அதன்பின்னர் அங்கிருந்து ஆகஸ்ட் 30ஆம் தேதி அமெரிக்கப் படைகளும் முழுமையாக வெளியேறின. கடைசி நாட்களில் மக்கள் விமான நிலையத்தில் திரண்டதாலும், ஐஎஸ் தீவிரவாதிகள் விமான நிலையத்தைக் குறிவைத்து நடத்திய தாக்குதலாலும் விமான நிலையம் சேதமடைந்தது. தலிபான்கள் முறைப்படி ஆட்சியமைக்கவும் கால தாமதமானது. இதற்கிடையில் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான விமானப் போக்குவரத்தை பாதுகாப்புக் காரணங்களுக்காக துண்டித்தன.

பின்னர் கத்தார் நாடு, தனது தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்பி காபூல் சர்வதேச விமானநிலையத்தை சீரமைத்தது. இதனால் அங்கு தற்போது வெளிநாட்டு நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்படுகின்றன.

இந்நிலையில், தங்கள் நாட்டு வர்த்தக ரீதியிலான விமானப் போக்குவரத்தைத் தொடங்குமாறு இந்தியாவுக்கு தலிபான்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடிதத்தில், "இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தானின் விமானப் போக்குவரத்துத் துறை இந்திய அரசின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குநகரத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

காபூல் விமான நிலையத்தை கடந்த சில நாட்களாக இயக்கி வந்த அமெரிக்கப் படைகள், அதை மீண்டும் பயன்படுத்தமுடியாதபடி சேதப்படுத்திச் சென்றது. ஆனால், கத்தார் நண்பர்கள் மீண்டும் விமான நிலையத்தை இயங்கும் நிலைக்கு கொண்டுவந்துள்ளனர். ஆகையால் இந்தியா மீண்டும் வர்த்தக ரீதியிலான விமானங்களை காபூலுக்கு இயக்க வேண்டுகிறோம்.

ஆப்கனின் காம் ஏர், அரியானா ஆப்கன் ஏர்லைன்ஸ் ஆகியன மீண்டும் பயணிகள் விமானத்தை இந்தியாவுக்கு இயக்க விரும்புகிறது. கடந்த ஆட்சியின் இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை இயக்குவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் அடிப்படையில் விமானங்களை இயக்க வேண்டுகிறோம் என்று கோரியுள்ளது.

காபூல் குழப்பங்களுக்கு இடையே கடந்த 5ஆம் தேதியன்று பாகிஸ்தான் முதன்முறையாக ஆப்கானிஸ்தானுக்கு பயணிகள் விமானத்தை இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x