Last Updated : 28 Sep, 2021 04:34 PM

2  

Published : 28 Sep 2021 04:34 PM
Last Updated : 28 Sep 2021 04:34 PM

பெண்கள் படிக்கவோ, பணிக்காகவோ காபூல் பல்கலைக்கழகத்துக்கு வர வேண்டாம்: புதிய வேந்தர் அறிவிப்பு

பெண்கள் படிக்கவோ, பணிக்காகவோ காபூல் பல்கலைக்கழகத்துக்கு வர வேண்டாம் என புதிய வேந்தராக தலிபான்களால் நியமிக்கப்பட்ட முகமது அஷ்ரஃப் கைராத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்த பிறகு பெண் சுதந்திரத்துக்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்படுகின்றன.

ஏற்கெனவே தலிபான் கல்வி அமைச்சர் ஷேக் மவுல்வி நூருல்லா முனீர், இன்றைய காலகட்டத்தில் முதுகலைப் பட்டத்துக்கோ, முனைவர் பட்டத்துக்கோ மதிப்பில்லை. முல்லாக்கள், தலிபான்கள் இன்று ஆப்கனிஸ்தானில் ஆட்சி அமைத்துள்ளனர். அவர்களிடம் எந்தப் பட்டமும் இல்லை. ஏன் பலரும் பள்ளிப் படிப்பைக் கூட படிக்கவில்லை. ஆனால் உயர்ந்து நிற்கவில்லையா? என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தலிபான் செய்தித் தொடர்பாளர்கள் அவ்வப்போது சில அறிக்கைகள் மூலம் பெண் கல்வி அனுமதிக்கப்படும் ஆனால் சில நிபந்தனைகளுடன் பெண்கள் அனுமதிக்கப்படுவர் என்று கூறினர்.

இது ஏதோ சிறிய அளவில் ஆப்கன் பெண்களுக்கு ஆசுவாசம் அளித்தது.

"தலிபான்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக பெண்கள் மீது கொண்டிருந்த பார்வை வேறு. இப்போதுள்ள பார்வை வேறு. ஆப்கானிஸ்தானில் என்ன மிச்சம் மீதி இருக்கிறதோ அதிலிருந்து நாங்கள் நாட்டைக் கட்டமைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

பெண் கல்விக்கு நாங்கள் அனுமதிக்கிறோம். ஆனால் அவர்கள் ஹிஜாப் அணிந்தே கல்வி நிலையங்களுக்கு வர வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு ஆசிரியைகள் பாடம் நடத்துவர். நல்ல வேளையாக இங்கே பெண் ஆசிரியர்கள் போதிய அளவில் உள்ளனர். இறைவனுக்கு நன்றி சொல்கிறோம். கல்வி நிலையங்கள் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும். ஆப்கானிஸ்தானின் பல்கலைக்கழகங்களில் இருந்து பயின்று வெளியேறுபவர்கள் உலகின் பிற நாடுகளின் மாணவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் இருபாலர் வகுப்புகளுக்கு இடமில்லை. கல்லூரிகளில் இருபாலர்கள் வகுப்புகள் நடந்தால் நடுவில் திரை வைக்கப்பட வேண்டியது கட்டாயம். பெண் பிள்ளைகளுக்கு ஆண்கள் வகுப்பு எடுக்க நேர்ந்தால் ஆன்லைன் வாயிலாக வகுப்பெடுக்கலாமே தவிர நேரடியாக வகுப்பு எடுக்க முடியாது" என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் அண்மையில் தெரிவித்தார். இதனால், பெண் கல்வி தொடரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் காபூல் பல்கலைக்கழகத்துக்கு புதிய வேதராக முகமது அஷ்ரப் கைராத் நியமிக்கப்படுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " ஆப்கனில் அனைத்து மக்களுக்கும் முழுமையான இஸ்லாமியச் சூழல் உருவாகும் வரை பெண்கள் காபூல் பல்கலைக்கழகத்துக்கு கல்வி கற்கவோ அல்லது பணியின் நிமித்தமாகவோ வர வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு குறித்து காபூல் பல்கலைக்கழகத்தின் பெண் ஊழியர் ஒருவர் நியூயார்க் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில், " இந்த புனித தலத்தில் எதுவுமே இஸ்லாத்துக்கு எதிரானது அல்ல. இங்குதான் அதிபர்களும், ஆசிரியர்களும், பொறியாளர்களும், முல்லாக்களும் உருவாக்கப்பட்டு சமூகத்துக்கு பரிசாகக் கொடுக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x