Published : 28 Sep 2021 03:51 PM
Last Updated : 28 Sep 2021 03:51 PM

அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் விடுதலையாகிறார்

அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் நிபந்தனைகள் ஏதுமின்றி முழுமையாக விடுவிக்கப்படுகிறார்.

அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்டு ரீகன் மீது கடந்த 1981 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதியன்று ஜான் ஹின்க்ளே என்பவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். வாஷிங்டனில், ஹில்டன் ஹோட்டலின் வெளியே இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ரீகன், அவரது செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் ப்ராடி, காவல்துறை அதிகாரி ஆகியோர் காயமடைந்தனர்.
கைது செய்யப்பட்ட ஜான் ஹின்க்ளேவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அவர், நான் டாக்ஸி ட்ரைவர் படம் பார்த்தேன். அதில் நடித்துள்ள நடிகை ஜோடி ஃபாஸ்டரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரை ஈர்ப்பதற்காக அவரின் அபிமானம் பெறவே இவ்வாறாக செய்தேன் என்றார். ஜான் ஹின்க்ளேவை போலீஸார் மனநலப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர மனநல பாதிப்பு இருப்பது உறுதியானது.

அதிலிருந்து 2016 வரை வாஷிங்டன் மனநல மருத்துவமனையில் ஹின்க்ளே இருந்து வந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றாலும் கூட அவர் மீது படுகொலை முயற்சி வழக்கே பதிவு செய்யப்பட்டது.

ஜான் ஹின்க்ளே

பின்னர் 2016ல் அவர் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார். வர்ஜினியா மாகாணத்தில் வில்லிம்ஸ்பர்க் பகுதியில் உள்ள அவரது தாயாருடன் அவர் வசிக்கலாம் என அனுமதியளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் தற்போதைய, முன்னாள் அதிபர்கள், துணை அதிபர்கள், நாடளுமன்ற உறுப்பினர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் செல்லக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஹின்க்ளே வரும் 2022 ஜூன் மாதம் முதல் பூரணமாக விடுவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு ரொனால்டு ரீகன் பவுண்டேஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜான் ஹின்க்ளே போன்றோர் இப்போதும் கூட மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தானவர்களே என்பதால் அவரது நிபந்தனையற்ற விடுதலையைக் கடுமையாக எதிர்க்கிறோம் என்று தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்தபோது ஜான் ஹின்க்ளேவுக்கு வயது 22. இப்போது அவருக்கு 66 வயதாகிறது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக மனநல மருத்துவமனை, வீட்டுத் தனிமை எனக் கட்டுப்பாடுகளுடன் இருந்துவிட்ட ஹின்க்ளேவுக்கு நிபந்தனையற்ற விடுதலை அவசியம் என்று ஒரு தரப்பினர் வாதாடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x