Last Updated : 27 Sep, 2021 08:05 PM

 

Published : 27 Sep 2021 08:05 PM
Last Updated : 27 Sep 2021 08:05 PM

ஆம், இந்தியாவைப் போலவே நாங்களும் தலிபான் ஆட்சியை நினைத்து கவலை கொள்கிறோம்: ஜெர்மனி

ஆம், இந்தியாவைப் போலவே நாங்களும் தலிபான் ஆட்சியால் மீண்டும் சர்வதேச பயங்கரவாதம் தலைதூக்கும் என்று நினைத்து கவலை கொள்கிறோம் என இந்தியாவுக்கான ஜெர்மனி நாட்டு தூதர் வால்டர் ஜெ.லிண்டர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், நாங்கள் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால், அது தோஹாவில் நடந்ததுபோல் மிகவும் மிதமானது. ஆரம்பநிலைப் பேச்சு. எங்களே நிபந்தனைகளில் மிக முக்கியமானது ஆப்கானிஸ்தான் மண் சர்வதேச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தளமாகிவிடக் கூடாது என்பதே.

இந்த விஷயத்தில், நாங்கள் இந்தியாவைப் போலவே தலிபான் ஆட்சியை நினைத்து கவலை கொள்கிறோம். தலிபான்களின் வெற்றி, மற்ற சிறு சிறு பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவிப்பதாக அமைந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.

ஆப்கன் அரசை ஆதரிப்பீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த வால்டர், எந்த ஒரு நாடும் பிறநாட்டின் அரசாங்கத்தை தனியாக அங்கீகரிக்கவோ, ஆதரிக்கவோ செய்வதில்லை. மாறாக நாட்டைத்தை தான் ஆதரிக்கின்றன. இப்போதைக்கு ஆப்கானிஸ்தான் ஒரு நாடு போல் நடந்து கொண்டு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள பிறநாடுகளை அனுமதிக்க வேண்டும் என்றார்.
அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தானில் பங்கு என்னவென்பது குறித்து துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் ஆலோசித்தார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் இந்தியா பல்வேறு சர்வதேச கூட்டரங்குகளில் கலந்து கொண்டது. இவை அனைத்திலுமே இந்தியா, மீண்டும் ஆப்கனிஸ்தான் பயங்கரவாதிகளின் பூமியாகப் பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தைப் பதிவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை ஆதரிப்போம்:

ஜெர்மனியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. முன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அங்கு தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் அங்கு மத்திய இடதுசாரி கொள்கை கொண்ட சோஷியல் குடியரசுக் கட்சி வெற்றிபெறும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், ஜெர்மனியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், இந்தியாவுடன் பலமான நட்புறவு தொடரும் என இந்தியாவுக்கான ஜெர்மனி நாட்டு தூதர் வால்டர் ஜெ.லிண்டர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x