Last Updated : 27 Sep, 2021 11:15 AM

 

Published : 27 Sep 2021 11:15 AM
Last Updated : 27 Sep 2021 11:15 AM

தொடரும் தலிபான்கள் கொடுமை: ஆப்கனில் தாடி வைத்திருப்போர் ட்ரிம் செய்யக் கூடாது

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் ஆண்களின் தாடியை மழிக்கவோ அல்லது ட்ரிம் செய்யவோ கூடாது என்று முடி திருத்துவோருக்குத் தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபின் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண்களுக்கு உரிமை வழங்கப்படும் என முதலில் தெரிவித்த நிலையில் பெண்கள் வேலைக்குச் செல்லக் கட்டுப்பாடு விதித்தனர்.

மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகளைத் திறந்த தலிபான்கள், மாணவிகள் குறித்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. உயர்கல்விக் கூடங்களில் மாணவிகள், மாணவர்களுக்கு தனித்தனி வகுப்பறையும், இருதரப்பும் பார்க்காத வகையில் திரையிடப்பட்டுள்ளது. மீண்டும் கடந்த 1996-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சி வருமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.

இந்நிலையில் ஆப்கனின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் ஆண்கள் தாடியை மழிக்கவோ அல்லது தாடியை ட்ரிம் செய்யவோ கூடாது என்று சலூன் கடைக்காரர்களுக்குத் தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தலிபான்களின் இஸ்லாமிய ஒழுங்குமுறை துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “சலூன் கடைக்காரர்கள், முடிதிருத்துவோர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஹெல்மாண்ட் மாகாணத்தின் தலைநகர் லஷ்கர் ஹா நகரில் ஆலோசனை நடத்தினோம்.

அந்தக் கூட்டத்தின் முடிவில் ஆண்கள் வைத்திருக்கும் தாடியை மழிக்கக் கூடாது. அவர்களின் தாடியை ட்ரிம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. சலூன்களில் மேற்கத்தியப் பாடல்கள், மேற்கத்திய இசை போன்றவற்றையும் ஒலிக்கவிடக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது.

தலிபான்கள் நடத்தும் ஆட்சியில் தொடர்ந்து ஏராளமான மனித உரிமைகள் நடந்துவருவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ஐ.நா., யுனெஸ்கோ போன்றவை கண்டித்து வருகின்றன . ஆனால், தலிபான்களின் செயல்கள் தொடர்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x