Published : 26 Sep 2021 03:24 AM
Last Updated : 26 Sep 2021 03:24 AM
தீவிரவாதிகளை பாகிஸ்தான் வெளிப்படையாக ஆதரித்து வருவதை உலக நாடுகள் அறியும் என்று ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபை கூட்டம் கடந்த 14-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்துக்காக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து பிரச்சினையை எழுப்பி பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐ.நா.வுக்கான இந்தியமுதல் செயலாளர் ஸ்னேகா துபேநேற்று முன்தினம் பேசியதாவது: தீவிரவாதிகளை உருவாக்குவதே பாகிஸ்தான்தான். தீவிரவாதிகளை வெளிப்படையாக ஆதரிப்பதற்கும், ஆயுதங்களை வழங்குவதற்கும் உலக அளவில் பாகிஸ்தானுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அதிக அளவில் பாதுகாப்பு அளித்து வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடைசெய்த தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது. தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது, நிதி உதவி செய்வது, பயிற்சி அளிப்பது மற்றும் தீவிரமாக ஆதரிப்பது என்பது பாகிஸ்தானின் நீண்ட கால கொள்கையாக இருக்கிறது. தீவிரவாதிகளை பாகிஸ்தான் வெளிப்படையாக ஆதரித்ததை உலக நாடுகள் அறியும்.
ஆனால் துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் பிரதமர் தங்கள் நாட்டுக்கு எதிராக பொய் பிரச்சாரம் பரப்பப்படுவதாக வெளியில் கூறி வருகிறார். ஐ.நா.சபையை அவர் தவறாக பயன்படுத்துகிறார். பாகிஸ்தான் போல் இல்லாமல் இந்தியாவில் எல்லா வகையிலும் சுதந்திரம் இருக்கிறது. சுதந்திரமான நீதித்துறை கொண்ட நாடாகஇருக்கிறது இந்தியா. ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பிரிக்க முடியாத பகுதியாக இருந்துள்ளது. எதிர்காலத்திலும் அது அப்படியே இருக்கும். பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு பகுதிகளும் இதில்அடங்கும். ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் உடனே வெளியேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT