Published : 25 Sep 2021 07:18 PM
Last Updated : 25 Sep 2021 07:18 PM

‘‘தீவிரவாதத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தும் நாடு; அதே கருவியால் பாதிக்கும்’’ – ஐ.நா. கூட்டத்தில் பாகிஸ்தான் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

நியூயார்க்

தீவிரவாதத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தும் நாடுகள், மற்றவர்கள் மீது தாக்கும் அதே கருவியால் தாங்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி பாகிஸ்தானின் பெயரைச் சொல்லாமல் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பேசினார்.

பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக நேற்று அமெரிக்கா சென்றடைந்தார். பெரு நிறுவனத் தலைவர்களுடன் சந்திப்பு, துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் சந்திப்பு என பல நிகழ்ச்சிகளி்ல் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.

அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்ற பின், அவரை தற்போது தான் பிரதமர் மோடி நேரடியாக சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவை மேம்படுத்துவது, பரஸ்பரம் ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், கரோனா, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்த ஆண்டின் பொது சபை விவாதத்தின் கருப்பொருள், கரோனாவிலிருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் வலிமையை உருவாக்குதல், தொடர்ந்து புனரமைத்தல், உலக தேவைகளை பூர்த்தி செய்தல், மக்களின் உரிமைகளை மதித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை புத்துயிர் பெறுதல்' என்பதாகும்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐ.நா. கூட்டத்தில் காணொலி மூலம் உரையாற்றியபோது இந்தியாவை இந்து அரசு என்று அழைத்தார். முஸ்லீம்களுக்கு கொடுமை இழைக்கப்படுவதாக கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி பேசுகையில் ‘‘தீவிரவாதத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தும் நாடுகள், மற்றவர்கள் மீது தாக்கும் அதே கருவியால் தாங்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி பாகிஸ்தானின் பெயரைச் சொல்லாமல் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:
கடந்த 1.5 ஆண்டுகளாக, உலகம் 100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான நோயைச் சந்தித்து வருகிறது. இந்தியா அதன் பொறுப்பை புரிந்துகொண்டு, கோவிட் -19 தடுப்பூசியை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. கோவிட் -19 க்கான உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது, இது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வழங்கப்படலாம். கோவிட் -19 தடுப்பூசி தயாரிப்பாளர்கள் இந்தியாவில் வந்து தடுப்பூசிகளை தயாரிக்க வரலாம். இந்திய விஞ்ஞானிகள் கோவிட் -19 க்கு நாசி தடுப்பூசியையும் உருவாக்கி வருகின்றனர்

இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஒரு பரவலான, உலகளாவிய, அனைவரையும் வளர்க்கும் ஒரு வளர்ச்சி செயல்முறையை நாங்கள் நம்புகிறோம். இந்தியா வளரும் போது உலகம் வளரும். இந்தியா சீர்திருத்தும்போது, உலகம் மாறும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x