Published : 25 Sep 2021 06:13 PM
Last Updated : 25 Sep 2021 06:13 PM

‘‘ரோம் செல்லும் வாய்ப்பு; பொறாமையால் அனுமதி மறுத்த பிரதமர் மோடி’’- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா

இத்தாலியின் ரோம் நகரில் நடந்த உலக அமைதிக் கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வந்த நிலையில் பிரதமர் மோடி பொறமை காரணமாக அனுமதி தராமல் தடுத்து விட்டார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.

இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்க வேண்டும் இல்லாவிட்டால் முதல்வர் பதவியிலிருந்து இறங்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்எல்ஏவும், வேளாண்அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார். இடைத்தேர்தல் இம்மாதம் 30-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதியும் நடக்கிறது.

இந்தநிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:

ரோமில் உலக அமைதி பற்றிய ஒரு கூட்டம் நடைபெறுகிறது. அங்கு நான் அழைக்கப்பட்டேன். ஜெர்மன் அதிபர், போப் (பிரான்சிஸ்) ஆகியோரும் கலந்து கொள்ள இருந்தனர். நான் கலந்து கொள்வதற்கு இத்தாலி சிறப்பு அனுமதி அளித்தது, ஆனால் மத்திய அரசு அனுமதி மறுத்தது. ஒரு முதல்வருக்கு இதுபோன்ற அனுமதி மறுப்பு சரியல்ல.

உங்களால் என்னைத் தடுக்க முடியாது. நான் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பவில்லை, ஆனால் இது தேசத்தின் மரியாதையைப் பற்றியது. பிரதமர் மோடி இந்துக்களைப் பற்றி பேசிக்கொண்டே இருங்கள், நானும் ஒரு இந்து பெண், ஏன் என்னை அனுமதிக்கவில்லை. நீங்கள் பொறாமைப்படுகிறீர்கள்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x