Last Updated : 24 Sep, 2021 05:45 PM

 

Published : 24 Sep 2021 05:45 PM
Last Updated : 24 Sep 2021 05:45 PM

கை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும்: தலிபான் தலைவர் திட்டவட்டம்

கைகளைத் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும் என தலிபான் தலைவர் முல்லா நூருதீன் துராபி தெரிவித்தார்.
தலிபான் அமைப்பை நிறுவியர்களுள் ஒருவர் முல்லா நூருதீன் துராபி. இவர் அண்மையில் ஏபி செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், கைகளைத் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

தலிபான்களின் முந்தைய ஆட்சியின் போது தவறு செய்பவர்களுக்கு மைதானத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதுவும் குற்றத்திற்கு ஏற்ப கை, கால்களை துண்டிக்கும் தண்டனைகள் வழங்கப்பட்டன.

இது குறித்த கேள்விக்கு பதிலளித்த துராபி, நாங்கள் மைதானத்தில் தண்டனை அளிப்பதை அனைவரும் கேள்வி கேட்கின்றனர். நாங்கள் யாருடைய சட்டங்களையும், தண்டனைகளையும் கேள்வி கேட்டதில்லையே. எங்கள் சட்டம் எப்ப்டியிருக்க வேண்டும் என்று எங்களுக்கு யாரும் சொல்லித்தரத் தேவையில்லை. நாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறோம். குரானின் அடிப்படையில் நாங்கள் எங்களின் சட்டத்திட்டங்களை வகுக்கிறோம் என்று கூறினார்.

தொழில்நுட்ப ரீதியாக செல்போன் பயன்பாடு தொடங்கி அனைத்து விதத்திலும் தங்களை தரம் உயர்த்திக் கொண்ட தலிபான்கள் கொள்கை ரீதியாக மாறவில்லை என்பதையே துராபியின் பேச்சு காட்டுவதாகக் கூறப்படுகிறது.

தலிபான்களின் தண்டனை முறை:

தலிபான்கள் தங்களின் முந்தைய ஆட்சியின் போது குற்றவாளிகளுக்கு காபூல் மைதானத்தில் மக்கள் முன்னிலையில் தான் தண்டனைகளை நிறைவேற்றுவார்கள். கொலைக் குற்றவாளிகள் தலையில் துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றுவார்கள். பொதுவாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சேர்ந்தவர்களே இந்தத் தண்டனையை நிறைவேற்ற அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு இல்லாவிட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றவாளியிடமிருந்து பிளட் மனி என்றழைக்கப்படும் குற்றத்துக்கு இழப்பீடாக பெருந்தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டால் கையை வெட்டுவார்கள். நெடுஞ்சாலையில் திருட்டில் ஈடுபட்டால் கால் துண்டிக்கப்படும்.

இந்நிலையில் புதிதாக அமைந்துள்ள அமைச்சரவை என்ன மாதிரியான தண்டனைகள் எல்லாம் வழங்கலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறது என்றும் துராபி கூறினார்.

எங்களின் செயல்பாடுகள் நாங்கள் அமெரிக்கர்கள் போல் அல்ல என்பதைக் காட்டும். நாங்கள் மனித உரிமைகளுக்காக நிற்கிறோம் எனக் கூறும் அமெரிக்கர்கள் மோசமான குற்றங்களைச் செய்வார்கள். நாங்கள் அப்படியல்ல. இஸ்லாம் சட்டங்களுக்கு உட்பட்டு தண்டனைகள் வழங்குகிறோம். கைகளைத் துண்டிப்பது பற்றி பல்வேறு விமர்சனங்களும் நிலவுகின்றன. ஆனால், கைகளைத் துண்டிப்பதால் அந்த நபர் அதே குற்றத்தை மீண்டும் செய்ய மாட்டார்.

இப்போது ஆப்கன் மக்கள் மத்தியில் ஊழல் மலிந்துள்ளது. பணத்தை அபகரிப்பது போன்ற பழக்கமும் உருவாகியுள்ளது. எங்கள் தண்டனை முறை அமைதியையும் நிலையான தன்மையையும் கொண்டு வரும். நாங்கள் எங்கள் சட்டதிட்டங்களை அமல்படுத்திய பின்னர் அதனை யாரும் உடைக்க நினைக்க முடியாது என்று துராபி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x