Published : 24 Sep 2021 11:53 AM
Last Updated : 24 Sep 2021 11:53 AM

அமெரிக்காவில் மூன்றாவது டோஸ் கரோனா தடுப்பூசிக்கு அனுமதி

அமெரிக்காவில் குறிப்பிட்ட சிலருக்கும் மட்டும் முதல் கட்டமாக மூன்றாவது டோஸ் போட அனுமதி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தரப்பில், “நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கக் கூடிய 65 வயதைக் கடந்தவர்களுக்கும், நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக உள்ளவர்களுக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி (பூஸ்டர்) போட அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் பொது சுகாதாரத் தேவைகளுக்குச் சிறந்த சேவையை வழங்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியே போடாமல் உள்ளனர். இதன் காரணமாக அமெரிக்காவில் கரோனா தொற்று அதிகரித்தது. இந்த நிலையில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முதல் கட்டமாக மூன்றாவது டோஸை அமெரிக்க நோய்த் தடுப்புத் துறை பரிந்துரை செய்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் இதுவரை 52% பேருக்கு முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா, பெரு, பாகிஸ்தான், இலங்கை, சூடான், எல் சால்வடார், எதியோபியா உள்ளிட்ட நாடுகளுக்கு லட்சக்கணக்கான தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.

டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது . கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 20 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x