Published : 21 Sep 2021 09:44 PM
Last Updated : 21 Sep 2021 09:44 PM

ஆப்கன் கிரிக்கெட் வாரிய சிஇஓவை அலுவலகத்துக்கே வந்து பதவி நீக்கம் செய்த ஹக்கானிகள்: ஏன் இவர்கள் ஆபத்தானவர்கள்?

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரியை நீக்கியுள்ளனர் தலிபான்கள் கூட்டாளிகளான ஹக்கானிகள். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று 20 ஆண்டு கால ஜனநாயக ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. அதன்பின்னர் அங்கு தலிபான்கள் இடைக்கால ஆட்சி அமைத்துள்ளனர்.

தலிபான்களின் முந்தைய ஆட்சியின் போது சினிமா, விளையாட்டு போன்ற எந்த ஒரு கேளிக்கைக்கும் அனுமதி கிடையாது. அதேபோல் இந்த முறையும் தலிபான்கள் பல்வேறு கெடுபிடிகளைப் படிப்படியாக விதிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரி ஹமீது ஷின்வாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஹக்கானிகள் இதனைச் செய்துள்ளனர். தலிபான்களின் கூட்டாளியான ஹக்கானி அமைப்பினர் ஆபத்தானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

பேஸ்புக் பதிவும்; முடக்கமும்:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டது தொடர்பாக ஹமீது ஷின்வாரி அவரே தனது பேஸ்புக் பக்கத்தில், தலிபான்களின் கூட்டாளிகளான ஹக்கானி அமைப்பைச் சேர்ந்த அனாஸ் ஹக்கானி கிரிக்கெட் வாரியத்துக்கு வருகை தந்தார். அவர் என்னிடம், இனிமேல் நான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரி இல்லை என்று கூறிச் சென்றார் எனப் பதிவிட்டிருந்தார். ஆனால், சில மணி நேரத்திலேயே இந்த பேஸ்புக் பதிவு அழிக்கப்பட்டது. பின்னர் அந்த பேஸ்புக் பக்கமே முடக்கப்பட்டது.

ஆப்கன் கிரிக்கெட் வாரியத் தலைவரை அலுவலகத்துக்கே வந்து எச்சரித்துச் சென்ற அனாஸ் ஹக்கானி, உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானியின் இளைய சகோதரர்.

இதற்கிடையில் ஆப்கன் கிரிக்கெட் வாரியத் தலைவராக இனி நஸீபுல்லா ஹக்கானி என்ற நஸீப் கான் நியமிக்கப்படுவதாக ஹக்கானி குழுமம் அறிவித்துள்ளது. நஸீபுல்லா முதுகலை பட்டம் பெற்றவர், கிரிக்கெட் பற்றியும் அறிந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த ஹக்கானிகள்? ஏன் ஆபத்தானவர்கள்?

1980களில் ஆப்கானிஸ்தான் நாடு சோவியத் ரஷ்யா ஆக்கிரமிப்பில் இருந்தது. அப்போது ஜலாலுதீன் ஹக்கானி உருவாக்கிய கொரில்லா அமைப்புதான் ஹக்கானி அமைப்பு. அவருடைய கொரில்லா தாக்குதல்களால் ஜலாலுதீன் ஹக்கானி சோவியத் எதிர்ப்பு ஹீரோவாக கருதப்பட்டார். கிழக்கு ஆப்கன் பகுதியில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.

அப்போது சோவியத்தை உடைப்பதில் கவனமாக இருந்த அமெரிக்கா இவருக்கு ஆதரவுக் கரம் நீட்டியது என்பது வரலாறு. மேலும், அப்போது பாகிஸ்தானால் ஊக்குவிக்கப்பட்ட தலிபான்களுக்கு பண மற்றும் ஆயுத உதவியை ஹக்கானிகள் செய்தனர். ஆப்கனிலிருந்து சோவியத் படைகள் பின்வாங்கிய பின்னர், ஒசாமா பின் லேடன் உள்ளிட்ட தீவிரவாதிகளுடன் ஜலாலுதீன் ஹக்கானி தீவிரமாக நட்பு பாராட்டினார். 1996ல் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய போது அவர்களுக்கு ஏகோபித்த ஆதரவு தந்தார் ஹக்கானி. அதற்குப் பரிசாக தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி இவருக்கு அமைச்சர் பதவி வழங்கியது.

2018ல் ஹக்கானி உடல்நலக்கோளாறால் மறைந்தார். அதன்பின்னர் அவருடைய மகன் சிராஜுதீன் ஹக்கானி அந்த அமைப்பின் தலைவரானார். இப்போதைய தலிபான் ஆட்சியில் சிராஜுதீன் ஹக்கானிக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை ஒட்டிய பகுதிகளில் இந்த அமைப்புக்கு இன்றளவும் ஏராளமான முகாம்கள் உள்ளன. ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட மிகக் கோரமான படுகொலைகள், தற்கொலைப் படை தாக்குதல்களை ஹக்கானிகளே நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x