Published : 21 Sep 2021 02:18 PM
Last Updated : 21 Sep 2021 02:18 PM

ஒரு பெண் கூட இல்லை: தலிபான் அரசில் ஆண்கள் மட்டுமே இணை அமைச்சர்களாக நியமனம்

தலிபான் தீவிரவாதிகளின் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லாஹ் முஜாஹித் | படம் உதவி: ட்விட்டர்.

காபூல்

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி இடைக்கால அரசு அமைத்துள்ள தலிபான்கள் அரசில் இணை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதிலும் ஒரு பெண்ணுக்குக் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஆண்கள் மட்டுமே கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டதற்கு சர்வதேச அளவில் பெரும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், இணை அமைச்சர்களாகவும் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர். அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் கடந்த 8-ம் தேதி அறிவித்தனர்.

தலிபான்கள் அறிவித்துள்ள அமைச்சரவையில் ஒரு பெண் கூட இல்லை. கடந்த முறையைப் போன்று ஆட்சி இருக்காது, பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும், கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை போன்றவை வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்த நிலையில் அமைச்சரவையில் ஒரு பெண் கூட இல்லை.

அமைச்சரவையில் இடம்பெற்ற பெரும்பாலான தலிபான்கள், தீவிரமான அடிப்படைவாதிகள், மதக் கோட்பாடுகளையும், அரசியல் விதிகளையும் சிறிதுகூட விலகாமல் கடினமாகக் கடைப்பிடிக்கக் கூடியவர்கள்.

ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர்.

தலிபான்கள் அமைச்சரவையில் முல்லா ஓமரின் மகன் மவுலவி முகமது யாகூப் முஜாஹித் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், உள்துறை அமைச்சராக மவுலவி சிராஜ் உத்தின் ஹக்கானியும் நியமிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க எப்பிஐ அமைப்பால் தேடப்படும் தீவிரவாதியாக சிராஜ் உத்தின் ஹக்கானி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இணை அமைச்சர்கள் பட்டியலையும் தலிபான்கள் அறிவித்துள்ளனர். அதிலும் ஒரு பெண்ணுக்குக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

காபூல் நகரில் தலிபான் தீவிரவாதிகளின் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லாஹ் முஜாஹித் இணை அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டு நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இணை அமைச்சர்கள் பட்டியலில் சிறுபான்மையாக இருக்கும் ஹசரா பிரிவினருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அமைத்துள்ள அரசு இடைக்கால அரசு. அமைச்சரவை விரிவாக்கம் இனிவரும் காலங்களில் நடக்கும்போது, பெண்களும் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.

அமைச்சரவையில் விரிவாக்கம், மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்த முஜாஹித், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்குமா என்பது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x