Published : 20 Sep 2021 04:04 PM
Last Updated : 20 Sep 2021 04:04 PM

பெண் கல்வி, பெண்ணுரிமை, தேசியக் கொடி விவகாரத்தில் தலிபான்கள் வாக்குறுதியைக் கடைப்பிடிக்கத் தவறிவிட்டனர்: ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய்

தலிபான்கள் வாகுறுதியைக் கடைப்பிடிக்கத் தவறிவிட்டதாக முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான்களுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அதிபராக இருந்த அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர்.

ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், ஆட்சியும் அமைத்துவிட்டனர். இஸ்லாமிய சட்டப்படிதான் ஆட்சி எனத் தெரிவித்த அவர்கள் பெண்ணுரிமை பேணப்படும் என்றனர்.

ஆனால், அங்கு நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. அங்கு பெண் கல்வி மறுக்கப்படுகிறது. பெண் கல்வி, பெண்ணுரிமை, தேசியக் கொடி போன்ற விவகாரங்களில் தலிபான்கள் தாங்கள் அளித்த வாக்குறுதியை மீறிவிட்டதாக ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கர்சாய் செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

தலிபான்கள் பெண் கல்வி, பெண்ணுரிமை, தேசியக் கொடி போன்ற விவகாரங்களில் தாங்கள் அளித்த வாக்குறுதியை மீறிவிட்டனர். ஆப்கானிஸ்தானின் இப்போதைய தேவை மக்கள் அச்சமின்றி வாழ வழிகாட்டும் அரசு. உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேணும் அரசு. மக்களின் வளர்ச்சிக்காக அவர்களின் மகிழ்ச்சிக்காகப் பாடுபடும் அரசு.

அதற்கு ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையின மக்கள், பெண்கள் என அனைவரையும் உள்ளடக்கிய அமைச்சரவை அமைய வேண்டும்.
பெண் கல்வியைத் தவிர்த்து நாட்டின் முன்னேற்றத்தைத் திட்டமிட முடியாது. தங்கள் பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் குறித்து பெற்றோர் அச்சம் கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் படிப்பதற்கான பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது அவர்களின் கல்வி உரிமையைப் பறிப்பதாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அங்கங்களான யுனெஸ்கோ, யுனிசெஃப் போன்ற அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே கடந்த வாரம், ஆப்கானிஸ்தானில் இயங்கிவந்த பெண்கள் நலத் துறையானது தற்போது நன்நடத்தை கற்பித்தல் மற்றும் தவறுகளைத் தடுக்கும் துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. பெண்கள், காபூலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x