Published : 18 Sep 2021 09:06 PM
Last Updated : 18 Sep 2021 09:06 PM

பெண்கள் நலத்துறை அமைச்சகத்தை நன்நடத்தை துறையாக மாற்றிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் இயங்கிவந்த பெண்கள் நலத் துறையானது தற்போது நன்நடத்தை கற்பித்தல் மற்றும் தவறுகளைத் தடுக்கும் துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான்களுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அதிபராக இருந்த அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர்.

ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், ஆட்சியும் அமைத்துவிட்டனர். இஸ்லாமிய சட்டப்படிதான் ஆட்சி எனத் தெரிவித்த அவர்கள் பெண்ணுரிமை பேணப்படும் என்றனர்.

ஆனால், ஆப்கானிஸ்தானில் இயங்கிவந்த பெண்கள் நலத் துறையானது தற்போது நன்நடத்தை கற்பித்தல் மற்றும் தவறுகளைத் தடுக்கும் துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் நலத் துறையின் கீழ் இயங்கிவந்த 100 மில்லியன் டாலர் முதலீட்டிலான பெண்கள் பொருளாதார மேம்பாடு மற்றும் கிராமப்புர மேம்பாட்டு திட்டமானது முடக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலிபான்கள், 7ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான ஆண் பிள்ளைகளை இன்று முதல் பள்ளிக்கு வரச் சொல்லியிருந்தாலும், பெண் பிள்ளைகள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. அதனால் தலிபான்களின் போக்கில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x