Published : 14 Sep 2021 06:59 PM
Last Updated : 14 Sep 2021 06:59 PM

ஏமனில் பதற்றம்: சவுதி தாக்குதல்

ஏமனில் சவுதிப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 43 ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து சினுவா ஊடகம் வெளியிட்ட செய்தியில், “ஏமனின் மாரிப் மாகாணத்தில் சவுதிப் படைகள் நடத்திய தாக்குதலில் 43 ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பலியாகினர். அவர்களது ஆயுதங்களும் தாக்கி அழிக்கப்பட்டன. ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகளைக் குறிவைத்தே இந்தத் தாக்குதலை சவுதி நடத்தியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 19 முறை சவுதி படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுகுறித்து சவுதி தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை.

சமீபநாட்களாக ஏமனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் போரில் குழந்தைகளைப் பயன்படுத்துவதாக ஏமன் நாட்டின் தகவல்துறை அமைச்சர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இந்தத் தாக்குதலை சவுதி நடத்தியுள்ளது.

ஏமன் போர்

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x