

கரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் சரிவர இயங்காத நிலையில் மாணவர்களின் சிரமத்தைக் கணக்கில் கொண்டு அனைவரையும் தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிப்பதாக பாகிஸ்தான் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நேற்று மாலை நிலவரப்படி 2,988 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. கடந்த ஜூலை மாதத்துக்குப் பின்னர் பாகிஸ்தானில் 3000க்கும் குறைவாக கரோனா தொற்று பதிவாகியிருப்பது இதுவே முதன்முறை.
பாகிஸ்தானில் இதுவரை மொத்தம் 1,207,508 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 26,787 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் கரோனா பாசிடிவிட்டி விகிதம் அதாவது நூறில் எத்தனை பேருக்கு தொற்று ஏற்படுகிறது என்ற விகிதம் 5.62% என்றளவில் உள்ளது.
அங்கு தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தில் தான் கரோனா தொற்று அதிகமாக இருக்கிறது. அங்கு நேற்று மட்டும் 1208 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அடுத்தபடியாக சிந்த் மாகாணத்தில் 905 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று மாகாணங்களின் கல்வி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தை அரசு ஒருங்கிணைத்தது. இதில் மத்திய கல்வி அமைச்சர் ஷஃபக்த் மஹமூத் தலைமை வகித்தார்.
அப்போது அனைத்து மாகாண கல்வி அமைச்சர்களுமே மெட்ரிக், இன்டர்மீடியட் தேர்வுகளுக்குத் தயாராவதில் மாணவர்களுக்கு சிக்கல் இருந்தது. இதனால் அவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ஷஃபக்த் மஹமூத் கூறியதாவது:
மாணவர்கள் தேர்ச்சியடையத் தவறும் ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்களுக்கு 33% மதிப்பெண் இலவசமாக வழங்கப்படும். ஆனால் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். பாடத்திட்டம் ஏதும் குறைக்கப்படமாட்டாது. மாணவர்கள் இந்த பெருந்தொற்று காலத்துக்கு இடையேயும் முழுக் கவனத்தையும் கல்வியில் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வரும் 16 ஆம் தேதி முதல் அனைத்துக் கல்வி நிலையங்களும் திறக்கப்படுகிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி தயார்:
இதற்கிடையில், பாகிஸ்தானில் 15 வயது முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசி தயாராக இருப்பதாகவும் மக்கள் இதைப் பயன்படுத்தி தங்களின் குழந்தைகளை கரோனா தொற்றிலிருந்து காப்பாற்றுமாறும் அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு அரசு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இப்போது 15 வயது முதல் 18 வயதிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி தயாராக இருக்கிறது. நீங்கள் 15 முதல் 18 வயதுடையவர்கள் என்றால் ஃபைஸர் பயோ என் டெக் தடுப்பூசிக்காக 1166 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி பதிவு செய்துகொள்ளுங்கள். குழந்தைகள் பதிவு விண்ணப்பம் பயன்படுத்தி Child Registration Form (B- Form) விண்ணப்பிக்கவும்" என்று தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.