Published : 12 Sep 2021 12:33 PM
Last Updated : 12 Sep 2021 12:33 PM

தலிபான் எதிர்ப்புத் தலைவர் அகமது மசூது எங்கே? 70% பஞ்ச்ஷீரைக் கைப்பற்றிய தலிபான்கள் தீவிரத் தேடுதல் வேட்டை

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை எதிர்த்து பஞ்ச்ஷீர் பகுதியிலிருந்து குரல் கொடுத்து வந்த அகமது மசூது எங்கே சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பஞ்ச்ஷீர் பகுதி போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1990களில் தலிபான்கள் ஆதிக்க சக்தியாக இருந்தபோது பஞ்ச்ஷீரை அவர்களால் நெருங்க இயலவில்லை. சோவியத் படைகள் கூட அப்பகுதியை நெருங்க முடியாத அரணாக அகமது ஷா மசூத் வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். அதிலிருந்தே தலிபான்களுக்கு பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் இருந்து எதிர்ப்பு கிளம்பிவிட்டது.

ஆனால், பஞ்ச்ஷீரின் 70% பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தலிபான் எதிர்ப்புக் குழு தலைவர் அகமது மசூத் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், மசூத் இன்னமும் ஆப்கானிஸ்தானில் தான் இருக்கிறார் என்று ஈரான் செய்தி நிறுவனம் ஃபார்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் ஆப்கன் மக்களுக்கு ஆடியோ மூலம் ஒரு வேண்டுகோளை முன்வைத்திருந்தார் அகமது மசூத். அதில், ஆப்கன் மக்கள் அனைவரும் சுதந்திரத்துக்காக, தனிநபரின் மாண்புக்காக, நாட்டின் வளாத்திற்காக ஒன்றிணைந்து எழுச்சியுடன் போராட வேண்டும் என்று குரல் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக மசூத் அறைகூவல் விடுத்துள்ளார். தலிபான்கள் பஞ்ச்ஷீரில் இருந்து வெளியேறினால் சண்டையை நிறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், தலிபான்களோ அகமது மசூதையும், ஆப்கனின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலேவையும் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x