Published : 12 Sep 2021 03:18 AM
Last Updated : 12 Sep 2021 03:18 AM
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலின் 20-வது நினைவுதினத்தை முன்னிட்டு அந்நாட்டு அதிபர் வெளியிட்ட காணொலி செய்தியில் ஒற்றுமைதான் நமது மிகப்பெரிய வலிமை என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம் இருந்தது. கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் தற்கொலைப்படையினர், 4 பயணிகள் விமானங்களை கடத்தினர். இதில் 2 விமானங்களை இந்த கட்டிடங்களின் மீது மோதினர். இதில் இந்தக் கட்டிடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இதில் 2,977 பேர் உயிரிழந்தனர். ஒரு விமானம் வாஷிங்டனில் உள்ள ராணுவ தலைமையகத்தின் மீது மோதி வெடித்தது. மற்றொரு விமானம் பென்சில்வேனியாவில் தரையில் மோதி வெடித்துச் சிதறியது.
இந்த தாக்குதலின் 20-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு காணொலி மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார். 6 நிமிடங்கள் ஓடும் அதில், “என்னைப் பொறுத்தவரை செப்டம்பர் 11 சம்பவம் நமக்கெல்லாம் ஒரு முக்கிய பாடமாக அமைந்தது. இது ஒற்றுமையை ஒருபோதும் உடைக்க முடியாது என்பதை நமக்கு உணர வைத்தது. ஒற்றுமைதான் நமது மிகப்பெரிய வலிமை. அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளை ஒருபோதும் சும்மா விடமாட்டோம். இன்று, நாளை மட்டுமல்ல, எப்போதும் அமெரிக்காவை பாதுகாப்போம்” என கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதல் நடந்தபோது செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மாக்ஸர் டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ளது. இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்-காய்தா அமைப்பின் தலைவர் பின்லேடனை வேட்டையாடுவதற்காக ஆப்கானிஸ்தானில் நுழைந்தது அமெரிக்க படை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை சுட்டுக்கொன்றது அமெரிக்க ராணுவம். இதையடுத்து, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து வீரர்களும் கடந்த மாதம் 30-ம் தேதி ஆப்கனிலிருந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT