காபூலுக்கு வர்த்தக ரீதியிலான விமானங்களை இயக்க பாகிஸ்தான் முடிவு

காபூலுக்கு வர்த்தக ரீதியிலான விமானங்களை இயக்க பாகிஸ்தான் முடிவு
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் முறைப்படி தலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் சர்ச்சைக்குப் பின்னர் அந்நாட்டுடன் முதல் வர்த்தக ரீதியான போக்குவரத்தைத் தொடங்குகிறது பாகிஸ்தான்.

இது தொடர்பாக பாகிஸ்தானின் பிஐஏ எனப்படும் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா கான் கூறுகையில், "பாகிஸ்தானில் இருந்து காபூலுக்கு வர்த்தக ரீதியிலான விமானங்களை இயக்கவுள்ளோம். விரைவில் வழக்கமான விமானப் போக்குவரத்தும் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த முறை முதலில் சில சார்ட்டர் விமானங்களை இயக்கவுள்ளோம். இந்த விமானங்கள் சில வாடிக்கையாளர்கள் தங்களின் உறவுகள் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட வேண்டியதன் பேரில் இயக்கப்படவுள்ளது" என்றார்.

முன்னதாக, கடந்த வாரம் அமெரிக்கர்கள், வெளிநாட்டவர்கள் உட்பட 200 பேர் கொண்ட விமானம் ஒன்று காபூலில் இருந்து பறந்தது. கத்தார் நாட்டின் மத்தியஸ்தத்தின் பேரில் அந்த விமானம் வெளியேற தலிபான்கள் அனுமதியளித்தனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 21 அமெரிக்கர்கள், 11 ஆப்கன் நாட்டவர் சார்ட்டர் விமானத்தில் கத்தார் சென்றனர். கத்தாரில் இருந்து இயக்கப்பட்ட இன்னொரு சார்ட்டர் விமானத்தில் 19 அமெரிக்கர்கள் பயணித்தனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 6000 அமெரிக்கர்கள் உட்பட 1,24,000 பேரை பத்திரமாக வெளியேற்றியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாய்ட் ஜெ. ஜஸ்டின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி தலிபான்கள் வசம் வந்தது. அங்கு தற்போது இடைக்கால அரசு அமைந்துள்ளது. முல்லா முகமது ஹசன் அகுந்த் அந்நாட்டின் இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார்.

காபூல் விமான நிலையத்தை சீரமைக்கும் பணிகளைக் கத்தார் அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் சர்ச்சைக்குப் பின்னர் அந்நாட்டுடன் முதல் வர்த்தக ரீதியான போக்குவரத்தைத் தொடங்குகிறது பாகிஸ்தான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in