Published : 10 Sep 2021 05:57 AM
Last Updated : 10 Sep 2021 05:57 AM

ஆப்கானில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் நடத்தும் போராட்டம் குறித்து செய்திசேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தலிபான்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான்கள், பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு காபூலில் ஆயிரக்கணக்கான பெண்கள் கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் போராட்டம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக ‘எட்டிலாட்ரோஸ்' என்ற நாளிதழின் செய்தியாளர் தர்யாபி மற்றும் வீடியோ எடிட்டர் நவுக்டி நேற்று முன்தினம் சென்றுள்ளனர். அப்போது திடீரென அங்கு காரில் வந்த ஒரு தலிபான் கும்பல், அவர்களைக் கடத்தி ஒரு வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், அவர்களை சாட்டையாலும், பிரம்பாலும் கடுமையாக தாக்கிவிட்டு வெளியே தூக்கி வீசியுள்ளனர்.உடலில் பலத்த காயமடைந்த அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனிடையே, காயமடைந்த பத்திரிகையாளர்களின் புகைப்படங்களை தலிபான்கள் நேற்று வெளியிட்டனர். அதில், உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் பத்திரிகையாளர்கள் நிற்பது போன்றகாட்சிகள் உள்ளன. இந்தப் புகைப்படங்கள் உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றன.

மனித உரிமை காக்கப்படும், பத்திரிகை சுதந்திரம் பேணப்படும் என ஆட்சியமைப்பதற்கு முன்புவாக்குறுதி அளித்த தலிபான்கள், மீண்டும் தங்களின் பழைய பாதையில் பயணித்து வருவதையே இந்தசம்பவங்கள் எடுத்துக் காட்டுவதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x