Published : 08 Sep 2021 02:41 PM
Last Updated : 08 Sep 2021 02:41 PM

முதுநிலைக் கல்வி, முனைவர் பட்டத்திற்கு மதிப்பில்லை; முல்லாக்கள் உயர் கல்வி கூட கற்காமல் தலைவர்களாக இல்லையா?: தலிபான் கல்வி அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு

முதுநிலைக் கல்வி, முனைவர் பட்டத்திற்கு மதிப்பில்லை; முல்லாக்கள் உயர் கல்வி கூட கற்காமல் தலைவர்களாக இல்லையா? என தலிபான்களின் கல்வி அமைச்சர் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. பிரதமர், துணைப் பிரதமர் என முறைப்படி அமைச்சரவைப் பட்டியலும் வெளியாகிவிட்டது.

1990களில் இருந்ததுபோல் எங்களின் ஆட்சி இருக்காது. இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு நாங்கள் பெண்கள் சுதந்திரம் வழங்குவோம். பெண் கல்வியைத் தடுக்க மாட்டோம். உலக நாடுகளுடன் இணக்கமான சூழலை விரும்புகிறோம் என்றெல்லாம் தலிபான்கள் பிரகடனம் செய்தனர். தலிபான்கள் மாறிவிட்டனர் என்றெல்லாம் விவாதங்களும் எழுந்தன. ஆனால், அவ்வளவு சீக்கிரம் அது நடந்துவிடாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் ஏதேனும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் புதிய கல்வி அமைச்சர் ஷேக் மவுல்வி நூருல்லா முனீர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் பேசியிருப்பதாவது:

இன்றைய காலகட்டத்தில் முதுகலைப் பட்டத்துக்கோ, முனைவர் பட்டத்துக்கோ மதிப்பில்லை. முல்லாக்கள், தலிபான்கள் இன்று ஆப்கனிஸ்தானில் ஆட்சி அமைத்துள்ளனர். அவர்களிடம் எந்தப் பட்டமும் இல்லை. ஏன் பலரும் பள்ளிப் படிப்பைக் கூட படிக்கவில்லை. ஆனால் உயர்ந்து நிற்கவில்லையா?

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து இணையவாசி ஒருவர் கல்வி குறித்து இவ்வளவு தரக்குறைவான கருத்தைத் தெரிவிப்பவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் இருப்பது பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். குரிப்பாக குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் இது மிகவும் ஆபத்தானது என்று கவலை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மெளல்வி அப்துல் சலாம் ஹனாபி நியமிக்கப்பட்டுள்ளனர். வெளியுறவுத்துறைஅமைச்சராக தோஹாவில் தலிபான் சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய மவுல்வி அமிர் கான் முதாகி நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறை அமைச்சராக முல்லா ஹிதயத்துல்லா பத்ரியும், கல்வித்துறை அமைச்சராக மவுல்வி நூருல்லா முனிரும், பொருளாதார விவகாரத்துறை அமைச்சராக குவாரி தின் முகமது ஹனிப் நியமிக்கப்பட்டுள்ளனர்.

33 பேர் கொண்ட அமைச்சரவையில், ஐ.நா.வால் பயங்கரவாதியாக அங்கீகரிக்கப்பட்ட சிராஜுதீன் ஹ்கானி உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x