ஆப்கன்: பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டத்தைப் பதிவு செய்த பத்திரிகையாளர்கள் கைது
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக இளம்பெண்கள் போராட்டத்தைப் பதிவு செய்த பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “தலிபான்களுக்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகளைக் கண்டித்து, காபூலில் இளம்பெண்கள் போராட்டம் நடத்தினர். சுதந்திரம், பாகிஸ்தானுக்கு மரணம் போன்ற முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். இந்த நிலையில் இந்தப் போராட்டங்களைப் பதிவு செய்த பத்திரிகையாளர்கள் தலிபான்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இளம்பெண்களின் போராட்டத்தைக் கலைக்க, தலிபான்கள் வானை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் காபூலில் பதற்றம் நிலவுகிறது” என்று செய்தி வெளியாகியுள்ளது.
தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கும் அரசியல் உரிமை வேண்டும் என்று இளம்பெண்கள் கடந்த சனிக்கிழமை அன்று காபூலில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில் சமூகச் செயற்பாட்டாளரான நர்கிஸ் பலத்த காயம் அடைந்தார். இந்த நிலையில் இந்தத் தாக்குதலைத் தலிபான்கள் நடத்தியுள்ளனர்.
