Published : 07 Sep 2021 01:10 PM
Last Updated : 07 Sep 2021 01:10 PM

குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி: திட்டத்தை செயல்படுத்திய கியூபா

உலக நாடுகளில் முதல் முறையாக குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கியூபா தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவதற்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் 2 வயது முதலான குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கியூபா தொடங்கியுள்ளது. கியூபாவின் மத்திய மாகாணத்தில் முதல் முறையாக நேற்று முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளை கியூபா செலுத்தி வருகிறது” என்று செய்தி வெளியாகியுள்ளது.

கியூபாவில் அப்டாலா, சோபேரானா ஆகிய கரோனா தடுப்பூசிகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளன. சீனா, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்ட நிலையில், கியூபா அதனைச் செயல்படுத்தியுள்ளது. பள்ளிகளை விரைவாகத் திறப்பதற்காகவே இந்த நடவடிக்கையில் கியூபா இறங்கியுள்ளது.

சீனா தனது சினோவாக் கரோனா தடுப்பூசியை 6 -12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் செலுத்த அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x