Published : 06 Sep 2021 03:14 AM
Last Updated : 06 Sep 2021 03:14 AM

ஆப்கனில் நடந்த சண்டையில் 600 தலிபான்கள் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அவர்களுக்கு எதிரான தேசியகிளர்ச்சிக் குழுவினருக்கும் நடந்தசண்டையில் 600 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள் ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆனால் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய கிளர்ச்சிக் குழுவினர் மட்டும் தலிபான்களுக்கு பணியாமல் எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு அந்த மாகாணத்தை சுற்றி வளைத்த தலிபான்கள், தேசிய கிளர்ச்சிக் குழுவுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

இந்த மோதலில் தலிபான் கள் 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பஞ்ச்ஷிர்மாகாண போராளிகள் குழுவினர்தெரிவித்துள்ளனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலிபான்கள் பிடிபட்டுள்ளனர் அல்லது சரண் அடைந்துள்ளதாக போராளிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், மற்ற மாகாணங்களில் பொருட்கள் விநியோகத்தை பெறுவதற்கு தலிபான்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக போராளிகள் குழுவின் செய்தித் தொடர்பாளர் பாஹிம் தஷ்தி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் தாக்குதல்

இதற்கிடையில், பாகிஸ்தானில்நேற்று நடந்த தற்கொலைப் படைதாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் பாலேக் இன மக்கள் தனி நாடு கோரி போராடி வருகின்றனர். பஸ்தூன் இன மக்கள் ஆப்கனோடு இணைய விரும்புகின்றனர். அந்தஇன மக்கள் வசிக்கும் பகுதிகளில் தெஹ்ரிக்-இ-தலிபான் (டிடிபி) என்ற தீவிரவாத அமைப்பு செயல்படுகிறது. அல்-காய்தா, தலிபான்களோடு கைகோத்து டிடிபி செயல்படுகிறது.

ஆப்கனில் அமெரிக்க படைகளுக்கு எதிராக டிடிபி தீவிரவாதிகளும் போரில் ஈடுபட்டனர். அப்போது பிடிபட்ட டிடிபி தீவிரவாதிகள் காபூல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த பின்னணியில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் உள்ள சோதனைச் சாவடிக்கு நேற்று பைக்கில் வந்த தற்கொலைப் படை தீவிரவாதி வெடித்துச் சிதறினார். இதில் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த பாகிஸ்தான் துணை ராணுவப் படையைசேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு டிடிபி பொறுப்பேற்றுள்ளது.

இத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆப்கன் சிறையில் இருந்து விடுதலையான டிடிபி தீவிரவாத தலைவர்களின் சதித் திட்டத்தால் குவெட்டா சோதனைச் சாவடியில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, பாகிஸ்தான் அரசின் வேண்டுகோளை ஏற்று, டிடிபிஅமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் தனிக் குழு அமைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x