காதலுக்காக அரச குடும்பத்தின் சொத்தை விட்டுக்கொடுத்த ஜப்பான் இளவரசி

காதலுக்காக அரச குடும்பத்தின் சொத்தை விட்டுக்கொடுத்த ஜப்பான் இளவரசி
Updated on
1 min read

காதலுக்காக அரச குடும்பத்தின் சொத்தை விட்டுக்கொடுத்த ஜப்பான் நாட்டு இளவரசி மகோ, பாரம்பரிய விழாக்கள் இல்லாமல் சாதாரண நபரைப் போல் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

ஜப்பான் பேரசர் நருஹிட்டோ. இவரது மருமகள் மகோ. இவர் அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரைக் காதலித்து வந்தார். அரசக் குடும்பத்துப் பெண்கள் சாதாரண நபர்களைத் திருமணம் செய்துகொள்ள தடை உள்ளது. இதனால் கடந்த பல ஆண்டுகளாகவே இவர்களின் திருமணத்துக்கு முட்டுக்கட்டை நிலவுகிறது.

இந்நிலையில், இந்த ஜோடி பாரம்பரிய முறையில் இல்லாமல், வழக்கமான கொண்டாட்டங்களைத் தவிர்த்து சாமான்யர்களைப் போல் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

29 வயதான மகோ திருமணம் செய்தபின்னர் இளவரசி என்ற பட்டத்தை இழந்துவிடுவார். திருமணத்துக்குப் பின்னர் மகோ தனது கணவருடன் அமெரிக்காவுக்கு குடிபெயரவிருக்கிறார்.

ஆனால், கொமுரோவை இன்னும் ஜப்பான ராஜ குடும்பம் விசாரணைக்கு உரிய நபராகவே கருதுகிறது. கொமுரோவின் முன்னாள் காதலியிடம் அவரது தாயார் கடன் வாங்கிய விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறது. இதனால், கொமுரோ தனது மீதான தவறான பிம்பம் விழுவதைத் தவிர்க்க அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கு சட்டம் பயின்றுவந்தார். மகோவின் தந்தை அகிஷினோ அண்மையில் திருமணத்தை தான் ஆதரிப்பதாகவும் ஆனால் மகோ பொதுமக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால், மகோ பல ஆண்டுகள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காதலுக்காக அரச குடும்பத்தின் சொத்தை விட்டுக்கொடுத்துள்ளார். அவர் விட்டுக்கொடுத்த தொகை 137 மில்லியன் யென் அதாவது 1.2 மில்லியன் டாலர் எனக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே பிரிட்டனின் இளவரசர் பிரின்ஸ் ஹாரி, மேகன் மார்கல் அரச வாழ்வைத் துறந்துவிட்டனர்.

மகோவின் சகோதரர் இளவரசர் ஹிசாஹிடோ. இவர் தான் இப்போதைக்கு ஒரே ஆண் வாரிசு. இவர்தான் ஜப்பானின் க்ரைசாந்திமம் அரியணைக்கு உரிமையுள்ளவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in