

தொலைக்காட்சித் தொகுப்பாளருக்குப் பின்னால் துப்பாக்கியுடன் தலிபான்கள் நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்த நிலையில், ஆப்கனில் இன்னமும் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
அந்த வகையில், தலிபான் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவரைக் கடந்த 17-ம் தேதி நேர்காணல் செய்த டோலோ சேனலின் பெண் பத்திரிகையாளர் பேஹஸ்டா அர்கான்ட் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் செய்தி சேனல் ஒன்றில் தொகுப்பாளருக்குப் பின்புறத்தில் கையில் துப்பாக்கியுடன் தலிபான்கள் இருக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
அவ்வீடியோவில் ஆப்கன் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஒருவர், தலிபான் தலைவர் ஒருவரை நேர்காணல் செய்கிறார். அப்போது அந்தத் தொகுப்பாளருக்குப் பின்னால் துப்பாக்கி ஏந்திய தலிபான்கள் வரிசையாக அவருக்குப் பின்னால் நிற்கின்றனர்.
இந்த வீடியோவைக் குறிப்பிட்டு ஈரான் பத்திரிகையாளர் மசிஹ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இதனை நிஜம் என்று நம்ப முடியவில்லை. தொகுப்பாளருக்குப் பின்னால் தலிபான்கள் நின்றுகொண்டு ஆப்கன் மக்கள் பயம் கொள்ள வேண்டாம் என்று கூற வைக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்களின் பயத்திற்கு தலிபான்களே காரணம். இதுவே அதற்கான சான்றாகும்” என்று பதிவிட்டுள்ளார்.