Published : 30 Aug 2021 06:58 PM
Last Updated : 30 Aug 2021 06:58 PM

மலேசிய பிரதமர் தனிமைப்படுத்திக் கொண்டார்: தேசிய தினத்தில் இணையவழியில் பங்கேற்பார் என அறிவிப்பு

கரோனா பாதித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் மலேசிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாகூப் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பிரதமர் யாகூப் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எத்தனை நாட்கள் தனிமையில் இருப்பார் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

தனிமைப்படுத்துதலில் உள்ளதால் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் தேசிய தினத்தில் பிரதமர் இணையவழியில் பங்கேற்பார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

61 வயதாகும், இஸ்மாயில் சப்ரி யாகோப் அண்மையில் தான் மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். கரோனா பெருந்தொற்றைக் கையாள்வதில் திறம்பட செயல்படவில்லை எனக் கூறி முந்தைய பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் மிகக்கடுமையான நெருக்கடி அளித்தன. இதனால் முஹைதீன் யாசின் பதவி விலகினார்.

அவரது விலகலைத் தொடர்ந்து இஸ்மாயில் சாப்ரி நாட்டின் 9 ஆவது பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். 61 வயதான இஸ்மாயில் மலேசியாவின் யுனைடட் மலாய் நேஷனல் ஆர்கனைஷேசன் (United Malays National Organisation UMNO) கட்சியைச் சேர்ந்தவர். இக்கட்சி மலேசியா பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றதிலிருந்து நாட்டை ஆட்சி செய்யும் கூட்டணிக் கட்சியில் பிரதானக் கட்சியாக இருக்கிறது.

இந்நிலையில், இஸ்மாயில் சாப்ரி யாகூபின் அமைச்சரவை சகாக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 31 அமைச்சர்களும், 31 துணை அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

துணை பிரதமர் பதவிக்கான அமைச்சர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சுகாதார அமைச்சராக கைரி ஜமாலுதீன் நியமிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவர் நாட்டின் தடுப்பூசித் திட்டப் பொறுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x