Published : 30 Aug 2021 01:17 PM
Last Updated : 30 Aug 2021 01:17 PM

ஏமனில் பயங்கரத் தாக்குதல்: 30 ராணுவ வீரர்கள் பலி

ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுத்தி படைகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 30 பேர் பலியாகினர். 60க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஏமனின் தென் பகுதியில் ஈரான் ஆதரவு ஹவுத்தி படைகள் தாக்குதல் நடத்தின. இரு அடுத்தடுத்த ஏவுகணைத் தாக்குதலைக் கிளர்ச்சியாளர்கள் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் காரணமாக ஏமனின் தென் பகுதிகளில் கடுமையான பதற்றம் நிலவுகிறது” என்று செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஏமன் ராணுவ அதிகாரி நஸிர் கூறும்போது, “எங்களால் ஒரு ஏவுகணையைக் கூட தாக்க முடியவில்லை. கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பலர் பலியாகினர். மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஏவுகணைத் தாக்குதலால் தரைமட்டமான கட்டிடங்களில் இன்னும் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர்” என்றார்.

சமீபநாட்களாக ஏமனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் போரில் குழந்தைகளைப் பயன்படுத்துவதாக ஏமன் நாட்டின் தகவல்துறை அமைச்சர் குற்றம் சாட்டினார்.

ஏமன் போர்

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x