தலிபான் தலைவருடன் அமெரிக்க சிஐஏ தலைவர் ரகசிய பேச்சுவார்த்தை

வில்லியம் ஜே பர்ன்ஸ்
வில்லியம் ஜே பர்ன்ஸ்
Updated on
1 min read

அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ தலைவர் வில்லியம் ஜே பர்ன்ஸ் திங்கள்கிழமை காபூலில் தலிபான் தலைவர் அப்துல் கனி பரதரை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் ஆப்கானிஸ் தான் தலைநகர் காபூலையும் தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான் ஆட்சிக்கு அஞ்சி, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்து வருகின்றனர்.

இதில், கடந்த திங்கள்கிழமை, காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானத்தில் இறக்கைகளில் ஏறி பயணித்த சிலர் உயிரிழந்தது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் காபூலில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை விமானத்தை அனுப்பி மீட்டு வருகின்றன. அங்கிருந்து விமானங்களில் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறுவதற்கு ஆகஸ்ட் 31-ம் தேதி காலக்கெடுவாக அமெரிக்கா நிர்ணயித்துள்ளது. அதற்குள் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி தங்கள் நாட்டு குடிமக்களையும் அழைத்து வந்து விட வேண்டும் என்ற இலக்குடன் அமெரிக்கா செயல்படுகிறது.

ஆனால் அந்த தேதியை தள்ளிப்போட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு நேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. அதேசமயம் தலிபான்கள் முன்கூட்டியே தாக்குதல் தொடுக்கக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதனால் தலிபான் தலைவர்களை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உளவு அதிகாரிகளை அனுப்ப ஜோ பிடன் முடிவு செய்தார். அதன்படி அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ தலைவர் வில்லியம் ஜே பர்ன்ஸ் திங்கள்கிழமை காபூலில் தலிபான் தலைவர் அப்துல் கனி பரதரை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in