Published : 23 Aug 2021 08:20 AM
Last Updated : 23 Aug 2021 08:20 AM

பாஞ்ஷிர் பள்ளத்தாக்கை நோக்கி விரையும் தலிபான் படைகள்: எதிர்ப்பாளர் அகமது மசூத் தாக்குப்பிடிப்பாரா?

தங்களுக்கு சவாலாக திகழும் அகமது மசூத் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் முன்னாள் துணை அதிபர் அமருல்லா சாலே ஆகியோரை தலைவணங்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் தலிபான்கள். இதற்காக இஸ்லாமிக் எமிரேட்டின் முஜாகிதீன் படையினர் நூற்றுக் கணக்கானோர் பயங்கர ஆயுதங்களுடன் பாஞ்ஷிர் பள்ளத்தாக்கை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட நிலையில் அங்கு புதிய ஆட்சி அமைக்க அவர்கள் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தான் தங்களுக்கு எதிராக வடகிழக்குப் பகுதியில் பாஞ்ஷிர் பள்ளத்தாக்கில் உருவாகும் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டிய நிலை தலிபான்களுக்கு ஏற்பட்டுள்ளது.

முதல் எதிர்ப்புக் குரல்:

தலிபான்களுக்கு எதிரான முதல் எதிர்ப்புக் குரல் என்று தான் அப்துல் மசூத், அமருல்லா சாலே ஆகியோரின் எச்சரிக்கையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஆப்கனின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பாஞ்ஷிர் பள்ளத்தாக்கு போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1990களில் தலிபான்கள் ஆதிக்க சக்தியாக இருந்தபோதும்கூட பாஞ்ஷிரை அவர்களால் நெருங்க இயலவில்லை. சோவியத் படைகள் கூட அப்பகுதியை நெருங்க முடியாத அரணாக அகமது ஷா மசூத் வைத்திருந்தார். அம்ருல்லா சாலே அந்தக் கோட்டையில் இருந்து வந்தவர். தலிபான்களை நீண்ட காலமாக எதிர்த்து வருபவர். 1990களில் இளம் வயதில் இருந்தபோதே அவர் தனது பெற்றோரை இழந்தார். அப்போது முதல் அவர் மசூதுடன் இணைந்து தலிபான்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார். 1996ல் தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியபோது அவர் அங்கிருந்து தப்பினார். ஆனால், தலிபான்கள் சாலேவின் சகோதரியைக் கைது செய்து துன்புறுத்திக் கொலை செய்தனர். 1996 சம்பவம் தலிபான் மீதான தனது பார்வையை மாற்றியமைத்ததாக அவர் ஒரு முறை கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

அம்ருல்லா சாலே தலிபான்களுக்கு விடுத்த செய்தியில், ''நான் என்றும் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் தலிபான் தீவிரவாதிகளுக்குத் தலைவணங்க மாட்டேன். எனது தலைவர் அகமது ஷா மசூதின் மாண்புக்கு எப்போதும் நான் துரோகம் இழைக்க மாட்டேன். என் வார்த்தைகளை நம்பிய லட்சக்கணக்கான மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்க மாட்டேன். தலிபான்களுடன் ஒரே கூரையின் கீழ் ஒருமித்து வேலை செய்ய மாட்டேன்'' என்று தெரிவித்திருந்தார்.

அமருல்லாவும், அகமது மசூதும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியானது. இருவரும் கைகோர்த்து தலிபான் எதிர்ப்புப் படைக்கு தலைமை தாங்குவதும் உறுதியானது. இந்நிலையில் தான், பாஞ்ஷிர் பள்ளத்தாக்கை எங்களிடம் அமைதியாக ஒப்படைக்க அங்குள்ள உள்ளூர் தலைவர்கள் மறுப்பதால் இஸ்லாமிக் எமிரேட்டின் நூற்றுக்கணக்கான முஜாகிதீன்கள் அங்கு படையெடுத்துச் செல்கின்றனர் என தலிபான்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு:

அகமது மசூது, தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்புகிறோம். எங்களுக்கு போர் நடத்த விருப்பமில்லை. ஆனால், அவர்கள் சண்டை தான் தீர்வு என்று நினைத்தால் அதற்கும் தயாராக இருக்கிறோம். எந்த ஒரு அடக்குமுறை ஆட்சியையும் நாங்கள் எதிர்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி அமைய வேண்டும். அதில் உள்நாட்டின் சிறுசிறு மொழிவாரியான குழுக்களுக்கும் இடம் அளிக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். சர்வதேச சமூகம் தலிபான்களை சர்வாதிகாரிகள் என்று அழைக்காத வண்ணம் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x