Published : 18 Aug 2021 01:17 PM
Last Updated : 18 Aug 2021 01:17 PM

காபூல் விமானநிலையம்: பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய தலிபான்கள்?

காபூல் விமான நிலையத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

இதன் காரணமாக காபூல் விமான நிலையத்தில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “விமான நிலையத்தில் கூட்டம் கூடுவதை தடுக்க தலிபான்கள் துப்பாக்கிச் சுடு நடத்தினர். இதில் 10 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஆப்கான் மக்களை பழிவாங்க மாட்டோம். ஆப்கனில் அமைதி ஏற்படும் என்று தலிபான்கள் தெரிவித்த நிலையில் இந்தத் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் இக்குற்றச்சாட்டுக்கு தலிபான்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.

முன்னதாக நேற்று செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹூல்லா, “எங்களுடன் சண்டையிட்ட அனைவரையும் நாங்கள் மன்னிக்கிறோம். ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்ற பெண்களுக்கு உரிமை உண்டு. ஊடகங்கள் தலிபான்களை விமர்சிக்கலாம்.ஆனால் பாரபட்சமின்றி இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x