Published : 17 Aug 2021 09:36 AM
Last Updated : 17 Aug 2021 09:36 AM

காபூலில் சிக்கிய 140 இந்திய தூதரக அதிகாரிகள்: பத்திரமாக மீட்பு; தூதரகம் மூடல்

காபூலில் சிக்கியிருந்த இந்திய அதிகாரிகள் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்டோரை இந்திய விமானப்படை விமானம் பத்திரமாக மீட்டது. இதனை தொடர்ந்து இந்திய தூதரகம் மூடப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர். பல நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளும் சிக்கி்க் கொண்டனர். அவர்களை மீட்டு வர ஒவ்வொரு நாடும் விமானத்தை அனுப்பி வருகிறது.

காபூலில் சிக்கியிருந்த இந்திய அதிகாரிகள், தூதரக ஊழியர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்டோரை இந்திய விமானப்படை விமானம் பத்திரமாக மீட்டது.

இந்திய அதிகாரிகள் உள்ளிட்டோர் 140-க்கும் மேற்பட்டோர் காபூலில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்டு வருவதற்காக இந்திய விமானப்படை விமானம் சி-170 ஆப்கன் அனுப்பப்பட்டது.

காபூல் நகரம் தலிபான்கள் வசம் சிக்கியதால் காபூல் விமான நிலையத்தின் ஒரு பகுதியில் இந்திய அதிகாரிகள் அனைவரும் பத்திரமாக கொண்டு வந்து சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x