Published : 16 Aug 2021 03:50 PM
Last Updated : 16 Aug 2021 03:50 PM

தலிபான்களின் முக்கியத் தலைவர்கள் யார்?- அடுத்த நகர்வு என்ன? அச்சத்தில் மக்கள்

தலிபான்கள் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரை இன்று தொடங்கவில்லை. இந்தப் போர் 2001ல் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டபோது உருவானது.

தலிபான்களின் பின்னணி என்ன?

1980களில் அமெரிக்காவுக்கும் அப்போதைய சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்தது. இந்த பனிப்போரில் குளிர்காய நினைத்த அமெரிக்கா சோவியத்துக்கு எதிரான முஜாஹிதீன் படைக்குள் சில பிரச்சினைகளை உண்டாக்கியது. அதிலிருந்து விலகிய சில உறுப்பினர்களுடன் 1994ல் தலிபான் படைகள் உருவாகின. 1996ல் அதன் கை மேலோங்கியது. நாட்டில் தீவிரமாக இஸ்லாமிய ஷாரியத் சட்டத்தை விதித்தது தலிபான் படைகள். மேலும் மத சிறுபான்மையினர் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாகினர். தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஒமர். 2001 செப்டம்பர் 11ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. அதன்பின்னர் தலிபான் படைகள்ளுக்கு அமெரிக்கா கடும் நெருக்கடி கொடுத்தது. அமெரிக்கப் படைகளை சமாளிக்க முடியாமல் அதன் அப்போதைய தலைவர் முல்லா முகமது ஒமர் தலைமறைவானார். 2013 ஆம் ஆண்டுவரை முல்லாவின் நிலவரம் என்னவென்பது மிகப்பெரிய ரகசியமாக பாதுகாக்கப்பட்டது. 2015ல் முல்லாவின் மரணத்தை அவரது மகன் உறுதி செய்தார்.

இப்போது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக ஆக்கிரமித்துவிட்ட நிலையில், அந்தப் படையில் 6 பேர் மிக முக்கியப் புள்ளிகளாகக் கருதப்படுகின்றனர்.

ஹைபத்துல்லா அகுன்சதா

இவர்தான் தலிபான்களின் சுப்ரீம் தலைவர் என்று அறியப்படுகிறார். தலிபான்களின் அரசியல், மதம் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை இவர்தான் தீர்மானிக்கிறார். இவருக்கு முன்னவரான அக்தார் மன்சூர் கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதுவரை அகுன்சதா தென்மேற்கு பாகிஸ்தானில் மதபோதகராக இருந்துள்ளார். அவருக்கு வயது 60. ஆனால், அவரின் இருப்பிடம் இப்போதுவரை ரகசியமாகவே உள்ளது.

முல்லா முகமது யாகூப்

இவர் தலிபான் அமைப்பை நிறுவிய முல்லா முகமது ஒமரின் மகனாவார். இவர்தான் தலிபான்களின் ராணுவத்தை மேற்பார்வை செய்துவருகிறார். ஒமர் மறைவுக்குப் பின் இவர்தான் தலைவராக வேண்டும் என பலமுறை வலியுறுத்தப்பட்டாலும் கூட இவர் அதனை ஏற்கவில்லை. வயது குறைவு, போர்க்கள அனுபவம் போதாது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி தொடர்ந்து அவர் தலைமைப் பொறுப்பை தவிர்த்து வருகிறார். யாகூப் இன்னும் 30 வயதைக்கூட எட்டவில்லை என்று கூறப்படுகிறது.

சிராஜுதீன் ஹக்கானி:

முஜாகிதீன் கமாண்டர் ஜலாலுதீன் ஹக்கானியின் மகன் தான் இந்த சிராஜுதீன் ஹக்கானி. இவர் தலிபான் படைகளின் நிதி மேலாண்மை நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறார். உலகம் முழுவதுமிருந்து தலிபான்களுக்கு நிதி திரட்டுவது இவரது பொறுப்பு. இவர்கள் தான் ஆப்கானிஸ்தானுக்குள் மனித வெடிகுண்டு பழக்கத்தைக் கொண்டு வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல், இந்திய தூதரகத்தைத் தகர்க்க நடந்த முயற்சிகள் ஹக்கானிக்களின் மூளையில் உதித்தவை என்றும் சொல்லப்படுகிறது.

முல்லா அப்துல் கானி பரதார்:

இவர் தலிபான் நிறுவனர்களில் ஒருவர். இப்போது அரசியல் தலைமயகப் பொறுப்பை நிர்வகிக்கிறார். இவர் தோஹாவில் நடைபெறும் ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தையில் தலிபான் பிரதிநிதியாகக் கலந்து கொண்டுள்ளார். இவர் ஒமரின் மிகவும் நம்பிக்கைக்குரிய கமாண்டர். 2010 ஆம் ஆண்டு இவர் பாகிஸ்தானின் கராச்சியில் பிடிபட்டார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2018ல் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய்

தலிபான் 2001க்கு முன்னதாக ஆட்சியில் இருந்தபோது இவர் தலிபான்களின் துணைத் தலைவராக இருந்தார். இவர் ஆப்கன் அரசுடன் தலிபான் சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றிருக்கிறார். இவர் பல்வேறு உலக நாடுகளில் நடந்த ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தலிபான்களை பிரதிநிதித்துவப் படுத்தி பங்கேற்றிருக்கிறார்.

அப்துல் ஹகீம் ஹக்கானி

இவர்தான் தலிபான்களின் தற்போதைய சுப்ரீம் தலைவர் அகுன்சதாவின் நம்பிக்கைக்குரிய தலைவர். இவர் தலிபான் அமைதிப் பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றிருக்கிறார்.

அடுத்தது என்ன?

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றிவிட்டனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளனர். இதனால், மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலாகும் சூழல் உருவாகியுள்ளது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ளது. மதச் சிறுபான்மையினர் அச்சத்தில் உள்ளனர். இத்தகைய சூழலில் இந்த 6 தலைவர்களும் என்ன மாதிரியான ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x