

கடந்த இரண்டு தினங்களில் முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஆப்கன் ஊடகங்கள் தரப்பில், “ஜோஸ்ஜன் மாகாணத்தின் முக்கிய நகரான ஷெபர்கானையும், தென்கிழக்குப் பகுதியின் முக்கிய நகரத்தையும் தலிபான்கள் கடந்த இரண்டு நாட்களில் கைப்பற்றியுள்ளனர். ஷெபர்கான் நகரமே தலிபான்கள் தாக்குதலால் நிலைகுலைந்துள்ளது. எனினும் ராணுவத் தலைமையிடம் மற்றும் விமான நிலையத்தை ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்" என்று செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தலிபான்கள் கைப்பற்றிய ஷெபர்கான் பகுதியை மீட்பதற்கு ஆப்கன் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க விமானப் படையினர் தலிபான்களின் நிலைகள் மீது பி-52 ரக வெடிகுண்டுகளை வீசியும், ஏசி-10 ரகத் துப்பாக்கிகள் மூலமும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர்.
மேலும் தலைநகர் காபுல் பகுதியில் தலிபான்கள் நுழையாத வண்ணம் அமெரிக்க ராணுவத்தின் எப்-16 ரகப் போர் விமானங்கள் கண்காணிப்பில் உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.