Published : 04 Aug 2021 01:55 PM
Last Updated : 04 Aug 2021 01:55 PM

சர்ச்சைக்குள்ளான கிம் புகைப்படம்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்து தொடர் சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், அவரது புதிய புகைப்படம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தென்கொரிய ஊடகங்கள் தரப்பில், “ஜூலை 24 முதல் ஜூலை 29 ஆம் தேதி வரை நடந்த வடகொரிய ராணுவக் கூட்டத்தில் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார். அப்போது அவரது தலையின் கீழ் பெரிய அளவில் பேண்டேஜ் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் கிம் சமீபத்தில் அறுவை சிகிச்சை ஏதேனும் செய்து கொண்டாரா? என்பது போன்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து வடகொரியா தரப்பில் இதுவரை அதிகாரபூர்வ பதில் வெளிவரவில்லை” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபகாலமாக வெளி உலகிற்கு வரவில்லை. வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்கின் பிறந்த தினக் கொண்டாட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது சந்தேகங்களை எழுப்பியது. 2011-ம் ஆண்டு அதிபராக வந்தபின், முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கிம்முக்கு சமீபத்தில் நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கிம்மின் உடல் நிலை குறித்துப் பல்வேறு வதந்திகள் பரவின. பின்னர் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த சில மாதங்களாகப் பொது நிகழ்வுகளில் கிம் பங்கேற்று வருகிறார்.

உலகம் முழுவதும் கரோனாவில் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும்போது வடகொரியாவில் மட்டும் கரோனா தொற்று குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x