

டாக்கா: வங்கதேசத்தில் இந்து இளைஞரை அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், ‘‘மைமன்சிங் மாவட்டம் பலுகாவில் 27 வயது சனாதன இந்து தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், ராப்பிட் ஆக்ஷன் பட்டாலியன் (ஆர்ஏபி) படையினர், சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்துள்ளனர். ஆர்ஏபி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, லிமோன் சர்க்கார் (19), தாரிக் ஹொசைன் (19), மாணிக் மியா (20), எர்ஷாத் அலி (39), நிஜும் உத்தின் (20), அலோம்கிர் ஹொசைன் (38), மிராஜ் ஹொசைன் அகோன் (46) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ஏபி பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டைகளை நடத்தி மேற்கூறிய சந்தேக நபர்களை கைது செய்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மறைந்த மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 2 மணி அளவில் இறுதிச் சடங்கு பிரார்த்தனை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தெற்கு பிளாசா பகுதியில் முகம்மது யூனுஸ் தலைமையில் இந்த பிரார்த்தனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஹாடி படித்த டாக்கா பல்கலைக்கழகத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு மற்றுமொரு பிரார்த்தனை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. பின்னர், பல்கலைக்கழக வளாகத்திலேயே அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக டாக்காவில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாறிவரும் வங்கதேச அரசியல்: வங்கதேச அரசுக்கு எதிராக மாணவர் அமைப்புகள் கடந்த ஆண்டு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதை தொடர்ந்து, பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
வங்கதேசத்தில் 2026 பிப்ரவரி 12-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டாக்கா-8 தொகுதி வேட்பாளராக ஷெரீப் உஸ்மான் ஹாடி (32) என்ற மாணவர் தலைவர் களமிறங்கினார். இன்கிலாப் மஞ்சா என்ற மாணவர் போராட்டக் குழுவின் மூத்த தலைவரான இவர், கடந்த ஆண்டு மாணவர் போராட்டத்தை வழிநடத்திய முக்கிய தலைவர்களில் ஒருவர்.
இந்நிலையில், டாக்காவில் கடந்த 12-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கிய இவரை, முகமூடி அணிந்த மர்ம நபர்கள், தலையில் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு டாக்காவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் முன்னேற்றம் இல்லாததால் கடந்த 13-ம் தேதி ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு, அங்கு உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷெரீப் உஸ்மான் ஹாடி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இந்த தகவல் வெளியானதை அடுத்து, கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி டாக்கா உட்பட பல்வேறுபகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல பகுதிகளில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ‘புரோதோம் அலோ’, ‘டெய்லி ஸ்டார்’ ஆகிய நாளிதழ் அலுவலகங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. சட்டேகிராம் பகுதியில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகம் மற்றும் இந்திய துணை தூதரின் வீடு மீது சிலர் கல்வீசி தாக்கினர்.
இந்தியாவுக்கு எதிராகவும், அவாமி லீக் மற்றும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். பாதுகாப்புப் படையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, அவர்களை தடுத்து நிறுத்தினர். அவாமி லீக் கட்சிக்கு சொந்தமான இடங்கள் மீதும் மாணவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்துக்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.