Published : 28 Jul 2021 02:35 PM
Last Updated : 28 Jul 2021 02:35 PM

இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றால் 3 ஆண்டுகளுக்கு பயணத் தடை: குடிமக்களுக்கு சவுதி எச்சரிக்கை

கரோனா வைரஸ் வேற்றுருவாக்கம் காரணமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டால் மூன்று ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்படும் என்று சவுதி அரேபியா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ கரோனா பரவல் அதிகமுள்ள நாடுகளை, தனது நாட்டுக் குடிமக்கள் பயணிக்கக் கூடாத வகையில் சிவப்புப் பட்டியலில் சவுதி அரேபியா வைத்துள்ளது. அந்த வகையில் அப்பட்டியலில் உள்ள நாடுகளுக்கு தடையை மீறி பயணம் மேற்கொண்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்படும் என்று சவுதி வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான். இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், பிரேசில், எகிப்து உள்ளிட்ட நாடுகள் சவுதி அரேபியாவின் சிவப்புப் பட்டியலில் உள்ளன” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சவுதியில், இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான். இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், பிரேசில், எகிப்து உள்ளிட்ட நாடுகள் சவுதி அரேபியாவின் சிவப்புப் பட்டியலில் உள்ளன.
உலக அளவில் இந்தியா உட்பட பல நாடுகளில் கரோனா 2-ஆம் அலையின் வேகம் சற்று தணிந்துள்ள போதிலும் முற்றாக நீங்கவில்லை. அதேசமயம் ஒருசில நாடுகளில் அதன் தாக்கம் தீவிரமாகவே இருந்து வருகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x