ஒலிம்பிக் கிராமத்தில் எழுந்த 'கட்டில் தர சர்ச்சை': ஐரிஷ் ஜிம்னாஸ்ட் விளக்கத்திற்கு ஐஓசி நன்றியும் பாராட்டும்

ஒலிம்பிக் கிராமத்தில் எழுந்த 'கட்டில் தர சர்ச்சை': ஐரிஷ் ஜிம்னாஸ்ட் விளக்கத்திற்கு ஐஓசி நன்றியும் பாராட்டும்

Published on

ஒலிம்பிக் கிராமத்தில், வீரர்கள், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டில் தரமற்றதாக இருப்பதாகவும், வீரர்கள் உடல் ரீதியாக எவ்வித உறவும் கொள்ளாத வகையில் உள்நோக்கத்துடன் இவை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீரர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் பங்கேற்க பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்களும், வீராங்கனைகளும் ஜப்பான் வந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்கு ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள தங்கும் விடுதிகளில் உள்ள கட்டில்கள் தரமற்றதாக இருப்பதாகவும், சமூக விலகல் என்ற பெயரில் வீரர்களோ, வீராங்கனைகளோ உடல் ரீதியாக உறவு கொள்ளக்கூடாது என்பதற்காக கட்டிலை கார்ட்போர்டு எனப்படும் பொருள் கொண்டு தரமற்றதாக உருவாக்கியிருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து பல்வேறு சமூக ஊடகங்களிலும் பரவலாக வாதங்கள் எழுந்தன.

இந்நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியுள்ள அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜிம்னாஸ்ட் ரைஸ் மெக்கிளனகன் தனக்கு ஒதுக்கப்பட்ட கட்டிலில் ஏறி குதித்து அதன் உறுதித் தன்மையைப் பற்றி விளக்கியும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், "ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கு வழங்கப்பட்ட கட்டில் ஆண் பெண் உறவுக்கு எதிரானது என்று கூறப்படுகிறது. எல்லோரும் சொல்வது போல் கட்டில் கார்ட்போர்டால் தான் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவை எளிதில் உடையக் கூடியதாக இல்லை. அது போலிச் செய்தி. அதை நம்பாதீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதனை உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சர்வதேச ஒலிம்பிக்க சங்கம் (ஐஓசி), "வதந்தியை உடைத்தமைக்கு நன்றி ரிஸ். அயர்லாந்து டீம் ஜிம்னாஸ்ட் ரைஸ் மெக்கிளனகன் கூறியதுபோல் கார்ட்போர்டு படுக்கைகள் தரமானவை உறுதியானவை" என்று பதிவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஏர்வீவ் என்ற நிறுவனம் ஒலிம்பிக் கிராமத்துக்கான படுக்கைகளை தயாரித்தது. ஒவ்வொரு படுக்கையும் 200 கிலோ எடையைத் தாங்கக் கூடியது. பல கட்ட சோதனைகளுக்குப் பிறகே இந்த படுக்கைகள் ஒலிம்பிக் கிராமத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக ஆஸ்திரேலிய கூடைப்பந்து வீரர் ஆண்ட்ரூ போகட் கட்டிலின் தரம் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே பல்வேறு சர்ச்சைகள் கிளப்பப்பட்டன.

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் மொத்தம் 33 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 339 பதக்கங்கள் வழங்கப்படும். இதில் உலகம் முழுவதுமிருந்து 11500 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களில் ஆடவர் 51% பெண்கள் 49%.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in