Published : 16 Jul 2021 04:57 PM
Last Updated : 16 Jul 2021 04:57 PM
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஜெர்மனியில் 93 பேர் பலியாகியுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் கடுமையான மழை பெய்து வருகிறது. பெல்ஜியம், நெதர்லாந்து, லக்ஸம்பர்க் போன்ற நாடுகளிலும் மழை பெய்துவருகிறது. இதற்கு, காலநிலை மாற்றம் தான் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஜெர்மனியில் ரைன்லாந்து பேலாட்டினேட், வடக்கு ரைன் வெஸ்ட்பேலியா பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், வடக்கு ரைன் வெஸ்ட்பேலியா பகுதியில் மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்தார். அவரும் புவி வெப்பமயமாதலே இந்த பேரழிவுக்குக் காரணம் என்று கவலை தெரிவித்தார்.
உலக நாடுகள் புவி வெப்பமயமாதலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
மேற்கு ஜெர்மனியில் அர்வீலர் மாவட்டத்தில் மட்டும் 1300 பேரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை. அங்கு 700 பேரைக் கொண்ட ஸ்குல்ட் எனும் கிராமம் முற்றிலுமாக அழிந்தது. ஜெர்மனி பெல்ஜியம் எல்லையை ஒட்டிய ருர்டால்ஸ்பெர் அணை நிரம்பி வழிவதால் கூடுதலாக சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவே கணிக்கப்படுகிறது.
மீட்புப் பணியில் 15,000 போலீஸும், ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானிகள் அதிருப்தி:
காலநிலை மாற்ற விவகாரத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். தேவைற்ற சர்ச்சைகளால் இவ்விவகாரத்தில் ஒன்றிணையாமல் மக்களின் நலனில் விளையாடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT