Published : 16 Jul 2021 02:06 PM
Last Updated : 16 Jul 2021 02:06 PM

இந்தியப் புகைப்படப் பத்திரிகையாளர் ஆப்கனில் நடந்த சண்டையில் பலி

மரணம் அடைந்த டேனிஷ் (இடது), இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அவரது புகைப்படம் (வலது).

ஆப்கானிஸ்தானில் தலிபான் - பாதுகாப்புப் படைகள் இடையே நடந்த சண்டையில் இந்தியப் புகைப்படப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் (ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்) உயிரிழந்தார்.

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளாக ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்கப் படைகளும் வெளியேறும் என்று ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான எல்லைப்புறப் பகுதிகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் அரசு சார் கட்டிடங்களையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் - தலிபான்கள் இடையே கடுமையான சண்டை நடக்கிறது. இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் ஆப்கன் படைகளுடன் வண்டியில் சென்று கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் பிரபல இந்தியப் புகைப்படப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் வீடியோ ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் கந்தஹாரில் ஆப்கன் படைகள் - தலிபான்களுக்கு இடையே நடந்த மோதலில் டேனிஷ் உயிரிழந்தார்.

பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான புலிட்சர் விருதைப் பெற்ற டேனிஷ், கரோனா இரண்டாம் அலையால் இந்தியா கடுமையான பாதிப்புக்குள்ளாகும்போது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய புகைப்படங்களை எடுத்தவர். அத்துடன் விவசாயப் போராட்டம், ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பாக இவர் எடுத்த புகைப்படங்கள் புகழ்பெற்றவை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x