

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 752 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், “நாட்டில் கடந்த 12 நாட்களாக கரோனா பலி அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 752 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். டெல்டா வைரஸ் பரவலே அதிக தொற்றுக்கு காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் இதுவரை கரோனாவுக்கு 143,712 பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் மாஸ்கோ கரோனாவின் மையமாக மாறி உள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யா ஆறாவது இடத்தில் உள்ளது. கரோனா தடுப்பூசிகளைக் குறைவாகச் செலுத்திவருவதே கரோனா பரவலுக்குக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளன.
ஸ்புட்னிக் கரோனாவுக்கு எதிராக 91.6% சிறப்பாகச் செயலாற்றக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 68 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.