Published : 10 Jul 2021 03:13 AM
Last Updated : 10 Jul 2021 03:13 AM

வங்கதேசம் உணவுப்பொருள் தொழிற்சாலையில் தீ விபத்து; 52 பேர் உயிரிழப்பு: 50-க்கும் மேற்பட்டோர் காயம்

வங்கதேசத்தில் உள்ள உணவுப் பொருள் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர்உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

வங்கதேசத் தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியான, நாராயண்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ரூப்கஞ்ச் என்ற இடத்தில் 6 மாடிக் கட்டிடம் ஒன்றில் ‘ஹஷேம் ஃபுட்ஸ்’ என்ற தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நூடுல்ஸ், பழ ஜூஸ்கள் மற்றும் மிட்டாய்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம்மாலை 5 மணியளவில் தொழிற்சாலை கட்டிடத்தின் தரை தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது. தரை தளத்தில் ரசாயனம் மற்றும் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்ததால் தீ மளமளவென பரவியது. மேலும் கட்டிடத் தில் கரும் புகை சூழ்ந்தது.

தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். உள்ளூர் மக்களும் அங்கு திரண்டனர். தீவிபத்தில் இருந்து தப்பிக்க தொழிலாளர்கள் பலர் மாடியில் இருந்து குதித்தனர். 18 தீயணைப்பு குழுவினர், தீயை அணைக்க பலமணி நேரம் போராடினர்.இந்நிலையில் இந்த தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

தொழிலாளர்கள் வெளியேறுவதற்கான ஒரே வழியான முன்வாயில் தீவிபத்து ஏற்பட்டபோது பூட்டப்பட்டிருந்ததாக, மீட்கப்பட்ட தொழிலாளர்களும் உறவினர்களும் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் கட்டிடத்தில் முறையான தீ பாது காப்பு வசதிகள் இல்லை என புகார் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்கான காரணம் மற்றும்சேதம் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்த விபத்து குறித்துவிசாரிக்க 5 உறுப்பினர் குழுவை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.

வங்கதேசத்தில் இதற்கு முன்புகடந்த 2019-ல் டாக்காவில் அடுக்குமாடி கடைகள், கிடங்குகள் நிறைந்தமுதுநகர் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 67 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டில் அடுக்குமாடி வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 2012-ல் டாக்கா புறநகர் பகுதியில் உள்ள ஆயத்த ஆடைதொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 112 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x