தடுப்பூசி போடாதவர்களுக்கே கரோனா அதிகம் பரவுகிறது: அமெரிக்க நிபுணர்கள் கருத்து

தடுப்பூசி போடாதவர்களுக்கே கரோனா அதிகம் பரவுகிறது: அமெரிக்க நிபுணர்கள் கருத்து
Updated on
1 min read

அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டுத் துறை தரப்பில், “கடந்த வாரத்தில் கரோனா தொற்றுகள் 11% அதிகரித்துள்ளன. கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அமெரிக்காவில் டெல்டா வைரஸே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவை முழுமையாக விரட்டும் அமெரிக்காவின் முயற்சிக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா கரோனா வைரஸ் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

உலக அளவில் கரோனா அலையின் வேகம் சற்று தணிந்துள்ளபோதிலும் முற்றாக நீங்கவில்லை. அதேசமயம் ஒருசில நாடுகளில் அதன் தாக்கம் தீவிரமாகவே இருந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in