Last Updated : 09 Jul, 2021 03:50 PM

 

Published : 09 Jul 2021 03:50 PM
Last Updated : 09 Jul 2021 03:50 PM

கரோனா தொற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுவதும், உயிரிழப்பும் மிக மிகக் குறைவு: பிரிட்டன் சுகாதாரத்துறை ஆய்வில் புதிய தகவல்

கரோனா பெருந்தொற்றால் குழந்தைகள், பதின்வயதினர் பாதிக்கப்படுவதும், உயிரிழக்கும் வாய்ப்பும் மிக மிகக் குறைவு என்று பிரிட்டன் அரசின் பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே உடல்நல பாதிப்புகள் இருக்கும் குழந்தைகள், பதின்வயதினர், உடல்ரீதியாக பலவீனமாக இருப்பவர்கள் ஆகியோர் மட்டுமே கரோனாவில் பாதிக்கப்பட்டால் மோசமான நிலைக்குச் செல்லக்கூடும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (யுசிஎல்), பிரிஸ்டல் பல்கலைக்கழகம், யார்க் பல்கலைக்கழகம், லிவர்பூல் பல்கலைக்கழகம், பிரிட்டன் சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து 18 வயதுக்குக் கீழ் உள்ள பிரிவினருக்கு கரோனா பாதிப்பு, தடுப்பூசி செலுத்துதல் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தின.

இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:

''கரோனா முதல் அலையிலிருந்து 2021, பிப்ரவரி மாதம் வரை இங்கிலாந்தில் 18 வயதுக்குட்பட்ட 251 இளம் வயதினர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இங்கிலாந்தைப் பொறுத்தவரை இந்த வயதுள்ள பிரிவினரில் 47,903 பேரில் ஒருவர் மட்டுமே ஐசியூ சிகிச்சைக்குச் செல்லக்கூடும்.

முதல் அலையிலிருந்து 2021 பிப்ரவரி வரை இளம் வயதுள்ள 309 பேர் மட்டுமே கரோனாவிலும், சில தீவிரமான பக்கவிளைவுகளாலும் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆய்வில், 38,911 பேரில், ஒருவருக்கு மட்டுமே இதுபோன்ற தீவிர பாதிப்பும், பக்கவிளைவுகளும் வருவதற்கு வாய்ப்புள்ளது.

முதல் அலையிலிருந்து 2021 பிப்ரவரி வரை இளம் வயது மற்றும் சிறார்கள் என 25 பேர் மட்டுமே கரோனாவில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கரோனாவில் உயிரிழப்பு என்பது, இந்தப் பிரிவினரில் 4.81 லட்சம் பேரில் ஒருவர் அல்லது 10 லட்சம் பேரில் இருவர் என்ற விகிதத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆய்வு குறித்து யுசிஎல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரஸல் வினர் கூறுகையில், “இந்த ஆய்வின் மூலம் இளம் வயதினர், குழந்தைகள் கரோனாவில் பாதிக்கப்பட்டு மோசமான நிலைக்குச் செல்வதும், உயிரிழப்பதும் மிக மிகக் குறைவு எனத் தெரியவந்துள்ளது.

இளம் வயதினர் ஏற்கெனவே உடல்நல பாதிப்பு இருப்போர், உடலில் கோளாறு இருப்போர், கரோனாவிலோ அல்லது குளிர்கால வைரஸால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருப்பார்கள் என உறுதியாகக் கூற இயலாது.

இந்தப் பிரிவினர் தீவிரமாக பாதிக்கப்படவும், ஃப்ளூ காய்ச்சல் போன்றவற்றாலும் பாதிக்கப்படலாம். இளம் வயதினர், குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் சூழலில் இந்த ஆய்வு இங்கிலாந்து மட்டுமல்ல உலக அளவிலும் உதவக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x