Published : 08 Jul 2021 03:12 AM
Last Updated : 08 Jul 2021 03:12 AM

வங்கதேசத்தில் 51 செ.மீ. உயரமே உள்ள குள்ளமான பசுவை பார்க்க திரளும் பொதுமக்கள்

வங்கதேசத்தில் கரோனா விதிமுறைகளை யும் மீறி, 51 செ.மீ. உயரமே உள்ள குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

வங்கதேச தலைநகர் டாக்கா அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில் ராணி என்ற பசு உள்ளது. இது 51 செ.மீ. உயரம், 66 செ.மீ. நீளம், 26 கிலோ எடை கொண்டதாக உள்ளது. 2 வயதான இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என அதன் உரிமையாளர் கூறுகிறார்.

இந்த பசுவின் படம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. பல்வேறு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்தி வெளியானது. இதனால், கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள், விதிமுறைகளையும் மீறி இந்தப் பசுவை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் அந்த பண்ணைக்கு படையெடுத்து வருகின்றனர். அந்தப் பசுவுடன் அனைவரும் செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.

இதையடுத்து, பார்வை யாளர்களை அனுமதிக்க வேண்டாம் என அரசு அதிகாரி ஒருவர் பண்ணை உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த மாணிக்யம் என்ற பசுவை உலகின் குள்ளமான பசு என கின்னஸ் உலக சாதனை அமைப்பு கடந்த 2014-ல் அங்கீகரித்தது. இதன் உயரம் 61 செ.மீ. ஆகும். இந்நிலையில், 51 செ.மீ. உயரமுள்ள ராணி பசுவுக்கு உலகின் குள்ளமான பசு என்ற அங்கீகாரத்தை கின்னஸ் உலக சாதனை அமைப்பு விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.- ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x