Published : 07 Jul 2021 12:02 PM
Last Updated : 07 Jul 2021 12:02 PM

வெளியேறும் அமெரிக்கப் படைகள்: ஆப்கனில் மீண்டும் கை ஓங்கும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் நிலையில், அங்கு மீண்டும் தலிபான்களின் கை ஓங்கி வருகிறது.

அமெரிக்க ராணுவம் பக்ரம் விமானத் தளத்திலிருந்து சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த வாரம் வெளியேறியது. செப்டம்பர் மாதத்துக்குள்ளாக முற்றிலுமாக அமெரிக்கப் படைகள் மற்றும் நோட்டோ படைகள் வெளியேறவுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக் காலம் முதலே ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜோ பைடன் நிர்வாகமும் இம்முடிவைத் தொடர்கிறது.

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதன் காரணமாக, அந்நாட்டில் மீண்டும் தலிபான்களின் கை ஓங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஆப்கனின் மேற்குப் பகுதியில் சில இடங்களை தலிபான்கள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் வீரர்கள் தஜ்கிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து நாட்டைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பு தற்போது ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் வந்துள்ளது.

அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது. 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x