Published : 06 Jul 2021 05:12 PM
Last Updated : 06 Jul 2021 05:12 PM

முழுமையான பாதுகாப்புக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி: இஸ்ரேலுக்கு ஃபைஸர் பரிந்துரை

இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் 12 மாதங்களுக்கு அப்புறம் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் எல்லாவகையான திரிபு வகைகளில் இருந்தும் முழுமையான பாதுகாப்பைப் பெறலாம் என்று பைஸர் தடுப்பூசி நிறுவனத்தின் நிர்வாக செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா, தெரிவித்துள்ளார்.

கரோனா டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் 98 நாடுகளில் பரவிவிட்டது. இதற்கு இஸ்ரேலும் விதிவிலக்கில்லை. 57% மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியையும் இஸ்ரேல் போட்டுவிட்டது. இதனால், கடந்த ஜூன் தொடக்கத்திலிருந்தே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் அந்நாடு அறிவித்தது.

இந்நிலையில், இஸ்ரேலில் இப்போது கரோனா திரிபு டெல்டா வகை வைரஸ் பரவிவருகிறது. இந்நிலையில் ஜூன் 6ல் ஊரடங்கில் மிகப்பெரிய தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் தடுப்பூசி 94% பாதுகாப்பையும், தளர்வுக்குப் பின்னர் 64% பாதுகாப்பையும் நல்குவதாக
இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.

டெல்டா வைரஸ் பரவல் வேகமெடுத்த சூழலும், ஊரடங்கு தளர்வும் ஒன்றாக அமைந்துவிட இந்தப் புள்ளிவிவரத்தை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
அதேவேளையில், ஃபைஸர் தடுப்பூசி டெல்டா திரிபால் தீவிர நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ள இஸ்ரேல் அரசு, கரோனாவால் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவோர் எண்ணிக்கை முன்பு 97% ஆக இருந்தது. தற்போது 93% ஆக குறைந்துள்ளது என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து ஃபைஸர் தடுப்பூசி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளார் டெர்விலா கேன் கூறும்போது. இஸ்ரேல் புள்ளிவிவரங்கள் பற்றி பதிலளிக்க முடியாது. ஆனால் எங்கள் தடுப்பூசி டெல்டா வைரஸ்களுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுகிறது. சாதாரா கரோனா வைரஸைவிட உருமாறிய கரோனா வைரஸை எதிர்ப்பதில் ஒருசில சதவீதம் மட்டும் குறைபாடு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலின் மொத்த மக்கள் தொகை 93 லட்சம். இதில் 57% மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர். ஆனால், இஸ்ரேலில் டெல்டா வைரஸ் பரவிவரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 55% முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். இவர்களில் 35 பேருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக பாதிக்கப்பட்டோர் புள்ளிவிவரங்களை வயது, தொற்று ஏற்பட்ட நாள், தடுப்பூசி செலுத்தப்பட்ட நாள் ஆகியவற்றின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பைஸர் தடுப்பூசி நிறுவனத்தின் நிர்வாக செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா, இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் 12 மாதங்களுக்கு அப்புறம் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் முழுமையான பாதுகாப்பைப் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x