கரோனா அச்சம்: தனிமைப்படுத்திக் கொண்ட பிரிட்டன் இளவரசி

கரோனா அச்சம்: தனிமைப்படுத்திக் கொண்ட பிரிட்டன் இளவரசி
Updated on
1 min read

தான் சமீபத்தில் சந்தித்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதுகுறித்து கென்சிங்டன் அரண்மனை வெளியிட்ட தகவலில், “பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் சமீபத்தில் ஒருவரைச் சந்தித்தார். அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இளவரசி கேட் மற்றும் இளவரசர் வில்லியம்ஸ் இருவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் கரோனாவுக்கான அறிகுறிகள் ஏதும் ஏற்படவில்லை. எனினும் அரசின் நெறிமுறைகளை அவர்கள் பின்பற்றியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேட் மிடில்டன், சமீபத்தில் விம்பிள்டன் தொடரை அரங்கில் நேரடியாகப் பார்த்தார். இதுதான் அவர் இறுதியாகப் பொதுவெளியில் கலந்துகொண்ட நிகழ்ச்சி.

கேட் மிடில்டன் கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

''கரோனா பெருந்தொற்று இன்னும் ஓயவில்லை. ஆகையால் மக்கள் வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கூட உயிருக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியில் செல்வதன் அவசியம், அவசரம் கருதி மக்கள் செயல்பட வேண்டும்'' என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஜூலை 19-ம் தேதி முதல் பிரிட்டனில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படவுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in