

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை ஒரத்தில் இருந்த 12 மாடி கொண்ட கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த 24 ஆம் தேதி திடீரென சரிந்தது. அமெரிக்காவையே இந்த விபத்து அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விபத்துக்குள்ளான கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையானது. கட்டிடத்தில் சமீப நாட்களாக புனரமைப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
கட்டிடத்தின் ஒருபகுதி சரிந்ததால் அதன் மற்ற பகுதி அப்படியே நின்றது. இதனால் மீட்புப் பணிகள் மேற்கொள்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. எனினும் மீட்புப் படையினர் போராடி சிலரை மீட்டனர். முதலில் ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாக கூறப்பட்டுவந்த நிலையில் இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
ஒருவாரத்துக்கு மேலாக மீட்புப் பணிகள் நடந்து வந்த நிலையில், புயல் அச்ச காரணங்களுக்காக கட்டிடம் இடிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
இன்னமும் அக்கட்டிடத்தில் தங்கி இருந்த மீட்கப்படாத 100க்கும் அதிகமானவர்களின் நிலை என்னவென்று தெரியாததால் அவர்களின் உறவினர்கள் அச்சத்தில் உள்ளனர்.